Flipkart

Amazon

Amazon

Sunday, December 22, 2013

ஐடி வேலையும் அரை கவளம் பர்கரும்!

                                                                                ஊருப்பக்கம் யாருனா ஆடு, மாடு வளத்துனா அதுங்களுக்கெல்லாம் ஆகாரம் வெச்ச பொறவு தான் வந்து சாப்பிட உட்காருவாங்க.  நாம சாப்பிடும் போது அதுங்களுக்கு பசிக்கக்கூடாதென்றது ஒரு காரணம், சாப்பிடும் போது கத்தி பாதில எழுப்பி விட்டுடுமேன்றது இன்னொரு காரணம். ஆனா, கம்யூட்டருக்கு இப்படி தண்ணி காட்டிட்டு நம்மளால நிம்மதி அரை கவளம் பர்கர கூட கடிக்க முடியாது, போனுல உலகத்துல ஏதோ ஒரு மூலைல இருந்து ஒருத்தன் நம்மள கடிப்பான்.

                 ஐடி வேலை பார்க்கும் எல்லோரும் சீட்டில் புட்டத்தை அழுந்த தேய்த்து அதற்கு மாதமாதம் வரும் விரல்களில் அடங்காத லகரங்களை எதிர்பாலினத்தரோடு குடித்து கூத்தடித்து தினம் ஒருவரோடு சல்லாபித்து வாழ்ந்து வருவதாக ஒரு பிம்பம் எல்லா மனதினுள்ளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. பொம்பள புள்ளைங்கள ஐடிக்கா அனுப்பறீங்க என்பது தொட்டு ஐடி நாய்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது வரை வசவு மொழிகளே கேட்டுக்கேட்டு வதங்கிப்போன வர்க்கம் இது.

              எல்லோரும் நினைப்பது போல இது ஒன்னும் பணம் காய்ச்சி மரம் இல்ல சாமிங்களா. காலைல அரக்க பரக்க எந்திரிச்சு ட்ராப்பிக்ல,சேத்துல, ஓடுற ஓ.எம்.ஆர் தண்ணில நீந்தி போய் என்ன கருமம்ன்னு எங்களுக்கே புரியாதத புரிஞ்சா மாதிரி நடிச்சு அத வெள்ளக்காரனுக்கும் புரிய வெச்சு(!!) சாயுங்காலம் ஏழு மணிக்கு கெளம்ப ஆரம்பிச்சா, அப்ப தான் புதுப் பொண்டாட்டிய மூடோட பாக்கற மாதிரி அவசர அவசரமா பக்கத்துல வந்து அவன் காலைல இருந்து செய்ய வேண்டிய வேலைய நம்ம தலைல கட்டுவான் ஒரு சொட்டத்தலையன் (ஒரு வேல அவன் வேணா நீங்க சொல்றா மாதிரி வாழுவான் போல யாரு கண்டா). இதை வாரம் ஐந்து முறை, சில வாரங்களில் ஏழு முறை கூட செஞ்சுட்டு வந்தா நம்ம பேர காட்டி 1 மணி நேரத்துக்கு இத்தினி டாலர்ன்னு கணக்கு போட்டு வாங்கீட்டு, அதுல 16 மணி நேரத்துக்கான காச நமக்கு ஒரு மாச சம்பளமா குடுப்பான்.

             ஒரு மெட்ரோ நகரத்தில் வீட்டு வாடகை தெரியுமா? பள்ளிக்கட்டணம்? பெட்ரோல் செலவு? ஒத்துக்கறோம் அய்யா, குடுக்கற காசை வாங்கீட்டு மூடிட்டு வர வர்க்கம் தான் நாங்க. அது ஒண்ணே ஒண்ணு தான் எங்க தப்பு.  அப்பறம் இன்னொன்னு ஐடிகாரனுங்க எல்லா விஷயத்துலையும் கருத்து சொல்றானுங்களாம். யோவ், தமிழ் நாட்ல இன்னிக்கு இதெல்லாம் சொல்லாதவன் எங்கய்யா இருக்கான்?

எல்லா பீட்லையும் முட்டாளும், Name dropping ஆளுங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. எல்லா நொட்டையும் சொல்லீட்டு எதுக்குய்யா உங்க பசங்கள ஐடி படிக்க வெக்கறீங்க? சமூகத்த திருத்தற நொன்னைங்க 20 வருஷமா வந்து நடக்கற ஐடி தற்கொலைகள தடுக்க வேண்டியது தான?

ஐடிகாரனுங்க கிட்ட தப்பே இல்லையான்னு கேக்காதீங்க. ஐடியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் மத்திய வர்க்கத்து மனோபாவ வார்ப்புகள். நமக்கேன் வம்பு டைப். இவர்களை பணந்தின்னிகளாக மாற்றிவிட்டது பணத்தாசை பிடித்த அவர்களது சுற்றம்/சமூகம். எதுக்கு சுத்தறோம்ன்னே தெரியாத செக்கு மாடு மாதிரின்னார் வா.மணிகண்டன். மிகச்சரியான உதாரணம். சமீபத்துல ஒரு கன்பெஷன் படிச்சேன். தற்கொலை பண்ணிக்க கூட ஆன்லைன்ல விஷம் ஆர்டர் பண்ணி இருக்கான். அடப்பாவிங்களா, கம்யூட்டருக்கு வெளிய ஒரு உலகம் இயங்கறதே மறந்துருச்சான்னு நெனச்சேன்.

இப்போ சொல்றேன் நோட் பண்ணிக்குங்க. என் முதல் நாவல், ஐடி துறை எப்படி ஒரு குடும்பத்துக்குள்ள ஒட்டகம் மாதிரி நுழையுதுன்னு பேசும். டாட்.

Thursday, December 5, 2013

நாவலிலிருந்து

                     அவள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தாள். மார்பு ஒவ்வொரு அடிக்கும் விம்மி விம்மி தாழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை கசகசத்தது. முன் கழுத்திலிருந்து கிளம்பிய வியர்வை மார்ப்பு குழியின் வழியோடி தொப்புளில் நின்று குறுகுறுப்பூட்டியது.

             காதுதருகில் கிசுகிசுப்பாய் ஒரு குரல் சில சமயம் கெஞ்சும் தொனியிலும், சில சம்யம் அதிகாரமாகவும், சில முறை  மன்னிப்பு கேட்கும் பாவனையும் நிற்கச்சொல்லிக்கொண்டே இருந்தது. அதை புறக்கணித்தபடி அவள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். அந்தக் குரல் மிகவும் நெருக்கமான குரல் என மனது அவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தது.

              எப்போதோ காதலித்த பழைய காதலர்களுள் ஒருவனாக இருக்கலாம். அவள் காதலர்களை நினைத்துக்கொண்டாள். எழுத்துக்கள் வட்டமிட்டு பல்வேறு பெயர்களை காட்டின. ஏனோ முரளியின் பெயர் ஆதிக்கம் செலுத்தியது போலிருந்தது.  அவனை நினைத்துக்கொண்டாள். அவனுக்கு இப்போது திருமணம் முடிந்திருக்கலாம். குழந்தை கூட இருக்கலாம். எதாவது ஒரு குழந்தைக்கோ அல்லது அது செல்லமாக வளர்க்கும் நாய்க்கோ தன் பெயர் வைத்திருப்பான். எப்போதாவது அவன் மனைவி இடது கழுத்தறுகே முத்தமிட்டு கடிக்கும் போது தன்னை நினைத்துக்கொள்வானாயிருக்கும்.

             காதோர கிசுகிசுப்பு இதற்குள் கூச்சலாய் மாறி மீண்டும் கிசுகிசுப்பாகி  இருந்தது. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என யோசித்து பார்த்தாள்.  அந்த குரலிற்கு நிற்கக்கூடாது என்பதற்காகவே ஓடுவதாகவே தோன்றியது. எப்போதிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம் என யோசிக்க முயன்றாள். ஏதோ கனவின் மத்தியில் இருப்பது போல இருந்தது. இந்த ஓட்டத்தின் தொடக்கமே அடுத்த நொடி நிகழவிருப்பதாய்
தோன்றியது. திரும்பி பார்க்கலாமா என யோசித்தாள். ஆனால், பயமானது ஆர்வம் பாசம் என அனைத்தையும் வென்றது.  மீண்டும் துவண்ட கால்களை கோணல் மாணலாக வைத்து ஓடலானாள்.

ஓடிக்கொண்டிருப்பது நின்று திரும்பிப்பார்க்க பயந்து தான் என அவளுக்கு தோன்றியது. வாழ்ந்து கொண்டிருப்பது மரணத்தின் மீதான பயத்தால் தான் என்று அவளுக்கு தோன்றியது. கோபப்படுவது இயலாமையின் சாரம் என்று தோன்றியது. எதிர்காலத்தையே பார்த்து ஓடுவது நினைவுகள் தரக்கூடிய வலியிலிருந்து தப்பிக்கவே என்று தோன்றியது. கனவிலியே இருக்க விரும்புவது விழிக்க விருப்பமினையால் என்று தோன்றியது.

விழிப்பு அவளை துரத்திக்கொண்டிருப்பதாக தோன்றியது.


------

அடுத்த ஜென்மத்தில் நான் சொல்லி "2324"ஆம் ஆண்டு ஈ-புத்தக , ஆடியோ புத்தக திருவிழாவிற்கு வெளிவர இருக்கும் எனது "மணல் மழை" நாவலில் இருந்து.

Saturday, October 26, 2013

உதிரிச் சொற்கள்

                       நீண்ட நாட்களாக எழுதவில்லை. எண்ணத்தில் உதிக்கும் சொற்கள் வடிக்க இடமின்றி மனக் கானகத்தில் பொருளற்று உலாவிக்கொண்டிருக்கின்றன. அறிவார்ந்து பேச சிலரை தேர்ந்தெடுக்க சில நாட்கள் பிடிக்கும். அப்படி அல்லாமல் எல்லோரிடமும் சொற்களை உதிர்த்தால் அது உலகின் மிகப்பெரிய விரயம்.

                       நேற்று சில நண்பர்களை சந்தித்தேன். பேச்சு நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விசயங்களை தழுவி ஓடியது. ஜவுளி கடைக்கு பேர் போன ஒருத்தரின் பேத்தியை நாடக காதல் புரிந்து பணம் பறிக்கப்பட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார். இருக்கலாம். இந்த வாரத்தில் நான் கேட்கும் முறிந்த/சிதைந்த/பணம் பறித்த காதல் கதைகளில் இதுவும் ஒன்று.

                    நீட்டி முழக்கி எழுத நேரமில்லாததால், இதை ஒரு சிறிய கட்டுரையாக்கி விடுகிறேன். தொடர்புடைய ஒரு சிறுகதையை எழுத உத்தேசம், நேரம் கிடைக்கட்டும்.  பிறந்தது முதல் ஒருகுழந்தை முதல் பிசியாக இருக்க வைக்கப்படுகிறது . பாட்டு, நடனம், ஓவியம் ஏதோ ஒரு எக்ஸ்ட்ரா திறமை (!! ஞே) அவனுக்கு/அவளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பின் ஏதோ ஒரு ஆங்கிலம் பேசாவிடில் பைன் விதிக்கும் ஒரு மனப்பாட பயிற்சி கூடத்தில் (பொது வழக்கில் பள்ளி) சேர்க்கப்படுகிறான்.அவன் உலகம் நண்பர்களோடு சுருங்கும் போது அவனது தேடல் சினிமா, விளையாட்டு, காமம் என்ற அளவோடு நின்று விடுகிறது. 

                     கல்லூரியிலும் இது தொடரும். ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் கல்லூரி முடித்து வெளிவரும் போது, இந்தியாவை பொறுத்த வரை அவர்களுக்கு சமூக புரிதலோ வாழ்க்கை குறித்த எந்த வித அறிவோ இருப்பதில்லை. அவர்கள் அறிவென கருதுவதெல்லாம் சினிமா, விளையாட்டு அல்லது மிஞ்சிப் போனால் நியூஸ் பேப்பரும் சேத்தன் பகத்தும் தான். இதை கடந்த சில நாட்களாக நேரடியாக காண முடிந்தது. ஏதோ ஒரு அடையாளத்தை தேடிக்கொள்ளும் பொருட்டு, ஒரு அற்புதமான வாழ்வை அதன் பருவங்களை, அப்பருவங்களின் அழகியலை  நாம் புறக்கணிக்கிறோம். 

                         ஒரு பெண்ணை Impress செய்வது மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் நடித்தால் போதும். எல்லா காதல்களிலும் நடித்தலும், Impress ஆதலும், திருமணத்திற்கு பின்பு அந்த முகமூடி கிழிகையில் ஏற்படும் அதிர்ச்சியுமே விவாகரத்துகளை அதிகரிக்கிறது. அழகு, Handsome, பேச்சு திறமை போன்ற விஷயங்கள் காதலை தீர்மானிப்பதில் தேவையின்றி பெரும்பங்கு வகிக்கின்றன. பெரும் பதவிக்கும், சமூக அந்தஸ்திற்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை என்ற என் எண்ணம் மீண்டும் ஒரு முறை உறுதிபட்டுள்ளது. மிக எச்சரிக்கையாய் இருக்கிறேன் பேர்வழி என பெண்கள் மிகச்சரியாக நல்லவர்களையும், ஏமாற்றுபவர்களையும் Vice versa வாக புரிந்து கொள்ளுதலை தினமும் பார்க்கிறேன். சொன்னால், பெண்ணியவாதிகள் பொங்குவார்கள், காரணம் வளர்த்த ஆணாகவே இருக்கலாம், ஆனால் நிறைய ஐடி பெண்கள் கொஞ்சம் மடக்க எளிதான முட்டாள்கள் தான்.

                          ஐடி கம்பேனியில் வேலை பார்ப்பவர்களை எல்லோரும் கரித்துக்கொட்டிவிட்டால் ஆச்சு. முன்பொரு காலத்தில் அரசு வேலைக்கு இதே நிலைமை தான். ஆனால், அவர்கள் கஷ்டம் நீவிர் அறியாதது. நேற்று பெசன்ட் நகர் சிக்னலில் பைக்கில் இன்ஸூரன்ஸ் இன்றி மாட்டினேன். ஐடி எனத்தெரிந்ததும் 1500 ,500 ,300 என பேரம் பேசிய போலீஸ்காரர், "கண்ட கண்ட எடத்துல பணத்த பொழியறீங்க. எங்களுக்கு குடுக்க ஏன்டா எறியுது" என்றார்.  ஐடி என்றாலே ஏதோ பரமானந்தத்தில் திளைப்பது போல இவர்களுக்கொரு பிரமை.

இந்த நாட்டின் பிரஜை ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றி இன்னொருவரின் வாழ்வை வாழச்செய்ய வேண்டும். இங்கு ஒருவருமே மகழ்ச்சியாகவோ சுதந்திரமாகவோ இல்லை என்பது புரியும்.

இணையம் எல்லோருக்குள்ளும் குறட்டைவிட்டுக்கொண்டிருந்த கல்யாண் ஜுவல்லர்ஸ் பிரபுவை, மூக்கினுள் புல்லை விட்டு அலறிக்கொண்டு விழித்தெழ வைத்திருக்கிறது. காலை எழுந்தவுடன் பல்லில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டே பாலஸ்தீன மக்களுக்காக போராட ஆரம்பித்து நியூஸ் பேப்பரில் வரும் இரங்கல் செய்தி தவிர்த்து பாக்கி எல்லாவற்றிக்கும் சொல்ல கருத்தோ, ஆதரவோ, பொங்கலோ ஏதோ ஒன்றை எல்லோரும் உருவாக்கிக் கொள்கிறோம்.

 நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, ஒன்றுமே தெரியாத, எதைப்பற்றியுமே கவலை இல்லாத இளம் தலைமுறையை செய்திகளின் பால் ஈர்ப்பது நல்லது தானே என்றார். நான் கூட மூன்றாண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் சிந்தித்தேன். அது ஓரளவு சரியும் கூட. ஆனால், முழுக்க அல்ல. இளைஞர்கள் இன்று லயித்து கிடக்கும் பேஸ்புக், முழுக்க முழுக்க இல்லையெனினும் பெரும்பாலும் திராபையான கருத்துக் குப்பைகளால் நிரம்பியுள்ளது.

இணையத்தில் தான் வித்தியாசமானவன் என்பதை காட்டிக்கொள்ள முன்பெல்லாம் முற்போக்கை தேர்ந்தெடுத்தார்கள். இப்போது அது உல்டாவாகிவருகிறது. எல்லோரும் முற்போக்கெனில், பிற்போக்கானவன் தானே வித்தியாசமானவன் என்ற தியரியை வைத்து  நான் பிற்போக்கு என்றே கூறிக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு ஜாதி ஜட்டியை தூக்கி பிடிக்கிறார்கள். எப்போதோ படித்த முல்லா கதைகளை அப்துல் கலாம், ரஜினி, மோடி என பிடித்த பெயரில் கலந்து கட்டி அடிக்கிறார்கள். Name-Droppingஐ அருமையாக பழக்கிவிடுகிறது இணையம். மத பழமைவாத, அடிப்படைவாத ஆட்கள் அருவாளோடு கெத்தாக திரிகிறார்கள். 


இப்போது ஏன் இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்... என்னை என்னாவாக பாவித்துக்கொண்டு உங்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கிறேன்? ஒரு பட்டாம்பூச்சிக்கு லாவாக்களுக்கு புத்தி சொல்ல எந்த அருகடதையும் கிடையாது. இவை கடக்கப்போகும் யாவற்றையும் பட்டாம்பூச்சி முன்னமே கடந்திருக்கலாம், அவற்றை அது அனுபவம் எனகூறிக்கொள்ளலாம். ஆனால், அதே அனுபவத்தை அடையப்போகும் அவற்றை காப்பாற்றுகிறேன் என தடுக்க, அவற்றை திசைதிருப்ப எனக்கு என்ன உரிமையுள்ளது??


Monday, July 8, 2013

அப்பறம் பாஸ், Life எப்படி போகுது?

                               ஒரு பால்ய தோழியுடன் நீண்ட நாட்கள் கழித்து நேற்று பேசினேன். ஒரு இந்திய முதலாளியின் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறாள். ஒரு பிரபல யுனிவர்சிட்டியில் எம்.எஸ் செய்வதாக சொல்லி வேலைக்கு எடுத்தார்கள். தோழி B.sc.. எம்.எஸ் செய்ய 16 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் (Only Engineers Qualify). இது ஒன்று தான் வழி என்பதால் ஏகப்பட்ட B.Sc,BCA  படித்தவர்கள் இதில் சேருவார்கள். நான்கு வருட ஒப்பந்தம். நான்கு வருட வேலை, வார இறுதியில் கல்லூரி.

                                  வாழ்கை செட்டில்ட்ன்னு வேலைக்கு ஆர்வமா சேர்ந்தாள் தோழி. நாலு வருஷம் கழிச்சு வெளிநாடு போலாமுன்னு பாஸ்போர்ட் மொதக்கொண்டு எடுத்து வெச்சாச்சு. ஒரு எட்டு மாசம் ஆச்சு. வேலை. காலேஜ். வேலை. காலேஜ். மெஷின் லைஃப். ரொட்டீன் லைஃப், படிக்கவே போரடிக்கல? அதே தான் அவளுக்கும். வெளில வரும் போது Work Experience Certificate கிடைக்காதாம். MS படித்ததால், Student Internship ஆகத்தான் கணக்காம். அவள் குரலில் ஒரு வெறுப்பு தொனித்ததை உணர முடிந்தது. பெங்களூர், சென்னை என மாற்றி மாற்றி பணிபுரிவதால் பெரிய அளவில் நட்பு வட்டமும் இல்லை. "நாலு வருஷம் கழிச்சு வெளி நாடு போகணும்ன்னு இப்ப ஆசையே இல்ல டா... நாலு வருஷம் முடிச்சு இந்த சாஃப்ட்வேர் கருமத்த விட்டு வெளிய வந்தா போதும்ன்னு தோணுது"ன்னா.

                                   ஆங்கிலப்படம் பார்க்கும் பழக்கமுள்ள எவரும் பார்த்திருக்கூடிய ஒரு படம் "The Shawshank Redemption". அதிலொரு காட்சி.  ஐம்பது ஆண்டுகள் சிறையில் கழித்த ஒருவரை விடுவித்து வெளி உலகிற்கு அனுப்புவார்கள். அவர் அதை தடுக்க எவ்வளோ முயன்றும் முடியாது. வெளியில் சென்ற அவர் ஒரு வாரத்தில் தூக்கு போட்டு செத்துப்போவார். அற்புதமான காட்சி அது. அவரை பற்றி "He was Institutionalized" என்பார் அவர் நண்பர். அவருக்கு அந்த சுவருக்குள் தான் உலகம். அதை தாண்டிய உலகத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வாமை உள்ள பொருள் போல அதை தாண்டிய உலகத்தை அவர் மனம் மறுதலித்து விடும்.

                                   இங்கே பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை அப்படித்தான். அது ஒரு Routine. ஒரு வேளை அதிலிருந்து அவர்களை வெளியில் இழுத்தால் அவர்கள் செத்துப்போவார்கள். நம் சமூகம் அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. "Settle" என்ற வார்த்தை அதற்கனவே உயயோகப்படுத்தப்படுகிறது. என் கல்லூரி பேராசியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் "Settling business is done at the graveyard. We have to move our asses till then".

                                   இத்தனை இழுவை ஏன் போட்டேன் என்றால், இந்த கேள்விய சொல்லத்தான் "அப்பறம் பாஸ், Life எப்டி போகுது. என்ன பண்ணலாமின்னு இருக்கீங்க?". கிட்டத்திட்ட இதே கேள்வியை, பதங்களை மாற்றி, நிற்கும் பொசிஷனை மாற்றி , சட்டை கலரை மாற்றி பல உருவங்கள் கடந்த சில நாட்களாக என்னிடம் கேட்கின்றன. காரணமில்லாமல் இல்லை. கல்லூரியை முடித்து, கல்லூரி நேர்முகத்தேர்வில் வேலைக்கு எடுத்த ஒரு பன்னாட்டு கம்பேனிக்காரன் கூப்பிடுவான் என காத்திருக்கும் அநேகர் எதிர்கொள்ளும் கேள்வி இது.

                                 எல்லோரும் கேட்பதால் மட்டுமல்லாமல், இது எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரு பதிவு, ஒரு Self Note.  நான் நதி போல, எதை எதிர்கொள்ளப்போகிறேன் என எனக்கே தெரியாது, பாதை செல்லும் வழியில் அப்படியே போய்க்கொண்டே இருப்பவன். ஆனால், நிஜத்தில் எதற்கும் பணம் வேண்டுமே. அதனால் எதாவது செய்தாக வேண்டும். Travelஇன் மீது அதி தீவிர ஈடுபாடு உண்டு. அதற்கும் பணம் வேண்டும். இரண்டு ஒலிம்பிக்ஸ், ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட், கால்பந்து, அப்பறம் ஒரு விம்பிள்டன் பார்க்க வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். 143 நாடுகள் பார்க்க வேண்டிய நாடுகள் என நான் தயாரித்துள்ள பட்டியலில் உண்டு.

                                    திருமணம் என புருவம் உயர்த்தினார் அப்பா. எனக்கானவள் எந்த தேசத்தில், எந்த இனத்தில் பிறந்திருக்கிறாள் என இன்னமும் தெரியவில்லை என்றேன். சிரித்துக் கொண்டார். எங்களுக்குக்காக அதை மட்டும் பண்ணிக்கோ என்றார். "ம்ம்" என்றேன் வெறுமனே.

                                  நமது சமூக சூழலில் ஒருவரின் உட்பட்ச லட்சியமே, ஒரு பிள்ளை பெற்று அவனை இன்ஜினியருக்கோ, டாக்டருக்கோ படிக்க வைத்து, நம் சாதியில் ஒரு பெண்ணை கட்டி வைத்து, அவனுக்கு பிறக்கும் பிள்ளைக்கும் நாம் அவனுக்கு செய்ததையே அவனை செய்ய வைப்பது. இது ஒரு முற்றுப்பெறாத கதை.

                                        நான் இதற்கு முற்றிலும் மாறானவன். எனக்கு மதமில்லை, சாதியில்லை. பொது வாழ்வில் மக்கள் பெருமை என கூறும் எந்த ஒரு அடையாள பாரத்தையும் நான் சுமப்பதில்லை. பொதுபுத்திக்கு விரோதமானவனை நேசிக்கலாம், ஆனால் கட்டிக்கொள்ள சரிப்படாது என்பாள் என் பழைய தோழி ஒருத்தி. சரி தான். இது வரை எந்தப்பெண்ணும் மாற்றிப்பேசியது இல்லை.

                                        ம்ம்... எங்கே விட்டோம். ம், பணம். பயப்படாதீர்கள். சாரு போல அக்கவுண்ட் நம்பர் கொடுக்கும் உத்தேசமில்லை.எந்த ஆசையை எடுத்தாலும், பணத்தில் வந்தே முட்டுகிறது. பேசாமல் ஜனாதிபதி ஆகிவிடலாம். ஆனால், ஒன்றுக்கும் உதவாத இந்த மனசாட்சி கேட்டுத்தொலைக்காது. ஈமு கோழி போல எதாவது கரடி வளர்க்கும் திட்டம் ஆரம்பித்து ஏமாற்றலாம், ஆனால் இங்கும் மனசாட்சி இடிக்கிறது. சரி, எதாவது செய்வோம். ஆனால், இந்த ரொட்டீன் லைஃப் எனக்கு சரிப்படாது.  நான் செட்டில் ஆவது சுடுகாட்டில் தான்.

படம் ConAir. "You know what is insane. Working on a damn office from 9 to 5 for 50 years and then settling in a village, waiting for a day to die to save our dignity, that we go reach the rest room in time. That is insane"

என்னிடம் இந்த கேள்வி கேட்கும் அனைவருக்கும் இந்த பதிவின் சுட்டியை கொடுக்கப்போகிறேன். :-)

"மவனே இனிமே கேப்ப?"