Flipkart

Amazon

Amazon

Tuesday, October 28, 2014

ஜில் கதைகள் - 5


தீபாவளிக்கு முந்தைய நாள் அனைவரையும் கலாச்சார உடை அணிந்து வரச்சொன்னபோதே சிறு மூளையில் ஒரு எல்.ஈ.டி மினுக்கத் தொடங்கி விட்டது. ஜில்லு புடவை கட்டும் ஸ்டைலை நினைத்துப் பார்த்தாலே, குண்டலினியானது விளக்கொன்று தலைகீழ் எரிந்தாற் போல், கீழ் நோக்கிப்பாயும்.
அடுத்த நாளில் இருந்து லீவ் போட்டிருந்ததால் முதுகுத்தோல் உரியுமளவு வேலை. மதியமே முடித்துவிட்டு கிளம்புவதாய் ப்ளான். வந்த போதே பதினொன்றரை இருக்கும். காலியாய் கிடந்த லிப்ட்டில் ஏறி பதினொன்றை அழுத்தி விட்டு, அசுவாரசியமாய் முத்தமிட்டுக்கொண்டிருந்த அலுமினியக்கதவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பண்டிகை காலமென்பதால் ஆபீஸே காலி. இல்லையென்றால் இந்த நேரத்துக்கெல்லாம், மல்லிகையை மூக்கினுள் வைத்து வாசம் காட்டுவார்கள். திருவிழாக்கூட்டமிருக்கும். முதல் தளத்தில் யாரோ நிறுத்தியிருந்தார்கள். கதவு விலகியடவுடன் ஏசி விரைத்த தரையை பார்த்துக்கொண்டு ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன். அதை உடைத்துக்கொண்டு அப்சரஸின் கால்கள் லிப்டினுள் மிதந்தன. நான் கண்ணை மேலே நிமிர்த்தவே இல்லை. கடவுளின் காலை காண உங்களுக்கு வாய்ப்பு கிட்டினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ... நிமிர்ந்து முகமிருக்கிறதா எனப் பார்க்க எனக்கு தோன்றவில்லை.
ஜில் என் மோவாயை நிமிர்த்தினாள்.
"என்ன டா ஆச்சு உன் போனுக்கு?"
"தொலைஞ்சுடுச்சு"
அவள் மார்புக் கச்சை மீது வெறித்திருந்த விழிகளில் மொத்த கவனமும் இருக்க, வாய் அனிச்சையாய் முணுமுணுத்தது.
"நாயே நிமிர்ந்து தொல டா, யாராச்சும் வந்து தொலைய போறாங்க"
Irresistible என்ற வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் புரியாவிடில் அன்று என் நிலையை விளக்க என்னால் வேறு வார்த்தைகளே தேட முடியாது. வெளிர் நீல நிறத்தில் பட்டுப்புடவை. இடப்பக்கத்தில் இருந்து பார்த்தால் விடைத்து நிற்கும் முயல்குட்டிகளுக்கு கீழே ஸ்கீயிங்க், பனிச்சறுக்கு சாகசம் நடக்கும் க்ளிஃப். குழந்தையின் மேலுதடு போல இருக்கும் அவள் காது மடல்களில் தொங்கும் நீல நிற ஜிமிக்கி. She is goddess of beauty, I say. அலுவலகமாய் இல்லாதிருந்தால், இனி லட்சோபலட்சம் ஆண்டுகளுக்கு கவிஞர்கள் உவமையாய் எடுத்தாளும் ஒரு மகத்தான காதல், கலவி சித்தித்திருக்கும். சிவனும் சக்தியும் புணர்ந்த போது அண்டம் அதிர்வதாய் ஊர்ப்பக்கம் வாய்ப்பாட்டு உண்டு. அதை மாற்றக்கிடைத்த ஒரு வாய்ப்பை வீண்டித்த கோபத்தில் லிப்ட்டை ஓங்கி உதைத்தேன்.
"என்னாச்சு?" பதற்றம் துளியுமில்லாத செக்ஸியான குரலில் வினவினாள் ஜில் (அல்லது எனக்கப்படி தோன்றியதா?)
ஒரே வினாடி. பார்வைகள் சந்தித்து மீண்டன. இரண்டு கோள்கள் மோதியது போல. ப்ளாக் ஹோல் என்பதை நாமெல்லாம் கற்பனையில் செய்து பார்த்திருப்போமே, அதன் உச்ச நொடியைப்போல.
அனிச்சையாய் நெருங்கி இருவரும் முத்தமிட ஆரம்பித்தோம். பெரு-நெருப்பென ஆக்ரோஷமாய் தொடங்கி, இடுப்பில் புரண்டு கொண்டிருந்த விரல்களில் வியர்வை பட்டவுடன் மெல்ல குழந்தையின் முகர்தல் போல மாறி தொடர்ந்தது. வைனில் ஊறவைத்த ஸ்ட்ராபெர்ரியை போல இருந்தன அவள் உதடுகள். ஸ்ட்ராபெர்ரி மார்கிரிட்டா மாக்டெய்லின் சுவை. முத்தம் முடிந்த பிறகும், பெருமூச்சு கழுத்தில் பட உடல் உரச வியர்வை பெருக்கெடுக்க நின்றிருந்தோம்.
மூச்சின் நெடி வியர்வை கலந்து வெப்பமாய் கழுத்தறுகே ஊர்ந்தது. நெடிய பாறை மீதெரும் வெய்யில் போல நேரம் மெல்லமாய் கரைந்து கொண்டிருந்தது.
பதிமொன்றாம் மாடி.
பிரிந்ததிருந்த அலுமினியக்கதவுகளின் ஊடாக ஒரு உருவம் உள்ளே
"எக்ஸ்க்யூஸ் மீ" என்றபடி நுழைந்தது.
ஒரு கணம் என்னை கண்டு திடுக்கிட்டு, "What are you staring at?" என்றவனை பார்த்து விஷமமாய் புன்னகைத்தபடியே வெளியேறினேன். ஜில் பத்தாவது ப்ளோரில் வேலை செய்கிறாள் 

ரமணா > கத்தி - ஏன்?

குறிப்பு :  கத்தி படத்தை ஏற்கனவே பலர் கிழித்து, கொண்டாடி எல்லாம் தொங்கவிட்டாயிற்று. விஜயை பகடி செய்வதோ, வெற்றி என கொக்கரிப்பதோ, கோக்ககோலாவில் நடிச்சுட்டு இத சொல்லலாமா என பொங்குவதோ இப்பதிவின் நோக்கமல்ல. இது 'சினிமா' விமர்சனம்.

               போதிய நேரமில்லாத காரணத்தால், முதலில் கதை மற்றும் அதன் கருவை விவாதித்து விட்டு பின் திரைக்கதையை அலசலாம். வழக்கம் போல ஒரு மிக வலிமையான கரு. விவசாயம் எப்படி உலகமயமாக்கலால் அழிகிறது. ஒரு விவசாய கிராமம். அதனிடம் இருக்கும் ஒரு வளம், அதாகப்பட்டது விவசாயத்திற்கு அடிப்படையான தண்ணீர். அதை உறிஞ்ச துடிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். உண்மையிலேயே வலுவான கதைக்கரு தான். தண்டகாரன்ய காடுகளில் தொடங்கி நக்சலைட்டுகளுக்கான அடிப்படை காரணம் வரை, உலகமயமாக்கலின் பின்னான வளச்சுரண்டலில் உரைந்திருக்கிறது.

             கத்தியின் திரைக்கதைக்கு முன் ரமணாவின் திரைக்கதையை யோசித்துப்பாருங்கள். முதல் காட்சியில் இருந்தே செட்டிங் தி ஸ்டேஜ் அது. விஜயகாந்த்தின் கேரக்ட்டரைஷேசன் மெல்லமாய், அழுத்தமாய் பதிவு செய்யப்படும். அது ஏன் என ஒரு சின்ன கேள்விக்குறி நமக்குள் விழுந்து அது விஸ்வரூபம் எடுக்கையில் ஒரு ப்ளாஷ் பேக்.  ரமணாவின் முக்கிய ப்ளஸ், அதன் திரைக்கதை தான். எல்லா கேரக்டர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து, அந்த கேரக்டர் தனது குணாதிசயத்தை கடைசி வரை கொண்டிருப்பது போன்ற திரைக்கதை. எத்தனை கூஸ் பம்ப் மொமெண்ட்ஸ்? மருத்துவமனையில் பிணத்துக்கு வைத்தியம் பார்ப்பது தொடங்கி, "We are not sentimental fools" வரையில். யூகி சேது கேரக்டருக்கு எத்தனை வலு?  நீங்களே ஒவ்வொரு சீனாய் நினைத்துக்கொள்ளுங்கள். சுமாராய் நடிக்கக்கூடிய யார் நடித்திருந்தாலும் ஹிட் அடித்திருக்கும். நல்ல திரைக்கதை அது.

             ஆனால், இதையே கத்திக்கு பொருத்தி பார்த்தால் தெரியும். பார்வையாளன் தியேட்டருக்கு வந்த முதல் 10 நிமிடத்தில் அவனை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார் சிட் பீல்ட். சமந்தா கால்ஷீட் இருப்பதற்காவும், பாட்டு படத்தில் வேண்டும் என்பதற்காவும் ஏனோ தானோவென 40 நிமிடங்களை சுட்டுத்தள்ளி இருக்கிறார் முருகதாஸ். சதீஷின் காமெடி, சமந்தாவின் லவ் சீன்ஸ் எல்லாம் விமர்சனம் செய்யக்கூட லாயக்கில்லாதவை. அப்படி வேண்டுமென்றால் கொஞ்சம் யோசித்து காதலை எழுதத்தான் உங்களுக்கு என்ன தயக்கம்? கஜினியைத் தவிர மத்த எல்லா படங்களிலும் முருகதாஸின் காதல் போர்ஷன் மொக்கை தான். காதலுக்கும், கிறுக்குப்பிடிப்பதற்கும் இருக்கும் அந்த நூல் அளவு வித்தியாசத்தை அவர் கவனிக்க தவறிவிடுகிறார் போலும்.

          இரண்டாவது விஜயையின் இன்ட்ரோ அபத்தத்தின் உச்சம். ஐந்து பேர் ஆளுக்கு நான்கு முறை சுட்டும் ஒரே தோட்டா தான் பாய்கிறது. அவரையும் காப்பாற்றி விடுகிறார்கள். அவர் ஏன் இராவில் காய்கறி எடுத்துப்போனார் என்பதற்கு லாஜிக் வேறு. படம் ஆரம்பிப்பதே அந்த ப்ளாஷ் பேக் சீனில் தான். ஆனால், அந்த ப்ளாஷ் பேக்கில் தற்கொலை கூஸ் பம்ப் மட்டும் இல்லையெனில் படமே விழுந்திருக்கும். யோசித்து பாருங்கள். 37 வயது ஆள் இன்னமும் காலேஜ் பிரண்ட்ஸோடு, ப்ரபசரோடு ஊருக்குள் சும்மா இருக்கிறாரா? இதற்கு அவர் வெளி நாடு போய் விட்டு ஊருக்கு வந்தவர் என்றாவது காட்டி இருக்கலாம். 22 வயதில் கல்லூரி முடித்திருப்பார். 15 வருடங்களாய் என்ன செய்தார்? சரி. முதல் சீனில் அவரை கிஞ்சித்தும் மதிக்காத கிராமத்து ஆட்கள் அடுத்த சீனிலேயே அவரை தலை மேல் தூக்கி வைக்கின்றனர். இதெல்லாம் விஜய் என்ற ஒற்றை மனிதனால் தெரியாமல் போனது. வேறு யாரென்றாலும் இந்தக்குறைகள் பெரிதாய் தெரிந்திருக்கும். செம்ம வீக்கான திரைக்கதை. Character establishment இன்னமும் மிக வலுவாய் செய்யப்பட்டிருக்க வேண்டிய பாத்திரம் ஜீவா.

       ஊரில் பிறந்தது முதல் இருப்பவர் கல்லூரி நண்பர்களிடம் தான் இது யார் நிலம் என்பாரா? இந்த நண்பர்கள், ஊர் இளசுகள் எல்லாம் சென்னை வந்து இவர் கேஸ் நடத்த உதவ மாட்டார்களா? கூலி வேலைக்கு போறது ஓக்கே. ஆனா ஒருத்தர் கூடவா இவர் கூட இருக்க மாட்டாங்க? அதென்ன கூலி வேலை மட்டும், ஒரு கம்ப்யூட்டர் தட்டுறவன் கூடவா ஊர்ல உருவாகி இருக்க மாட்டான், விஜயை தவிர?
         விவசாயிக்கு தெரிந்த ஒரே வழி என தற்கொலை செய்வது செம்ம சீன். இதன் பிறகு அப்படியே ஜம்ப் அடித்தால் அந்த பைப் சீக்வன்ஸ் மட்டும் தான் அடுத்த கூஸ் பம்ப் சீன். இடையில் வரும் சில்லறை தூக்கிப்போடும் சண்டை, மற்ற எல்லா சண்டைகளும் எடுக்கணுமேன்னு எடுத்தது. 90களின் டெக்னிக். இந்த சண்டை எல்லாம் பில்லர்ஸ். இதே நேரத்தில் ரமணாவில் எவ்வளவு பரபரப்பாய் திரைக்கதை சுழன்று கொண்டிருந்தது என்பதை நினைவில் நிறுத்தவும்.

     இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள். பெரு-நகர மக்களை நேரடியாய் தங்கள் அக்கறையின்மைக்காய் குற்றம் சாட்டியதை பாராட்டியே ஆக வேண்டும். பலர் இந்த இடத்தில் சுற்றி வளைத்திருப்பார்கள். ஆனால், வழக்கம் போல ஒற்றை மனிதத்தீர்வை முன்வைத்ததை தவிர்த்திருக்கலாம். இது வணிக சினிமா, தீர்வு எல்லாம் தரவில்லை என்பவர்களுக்கு, இதையே ஜெண்டில் மேனுக்கு சொல்லலாமா? சிவாஜிக்கு? இதெல்லாம் சமூக பிரஞ்ஞை இல்லாதவர்களுக்கு நஞ்சு. இவங்க தான் நாளைக்கு ஓட்டுப்போடப்போற மாஸ்.

   இந்த இடத்தில் பேசப்பட்டதில் முக்கால்வாசி நம்மாழ்வாருடையது. குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், திமுகவை மட்டும் நைசா தாக்கி, ஜெவை விட்டது கயவாளித்தனம். அதே போல அந்த கம்யூனிச டயலாக் அவசியமில்லாத இடைச்செருகல். ஆனால், இதை எல்லாம் விட்டுவிடலாம். ஏன் எனில் இது பணம் செய்ய எடுக்கப்பட்ட சினிமா, மாற்று சினிமாவோ, டாக்குமெண்ட்ரியோ அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். விவசாயத்திற்கு இது ட்ரிப்யூட் என படத்தை பார்க்க சொன்னால் அது கயவாளித்தனம். திருப்பூரில் ஞாயிறு அன்று ஒரு டிக்கெட்150 ப்ரோ. ஒரு கிலோ அரிசியோட கொள்முதல் வெலை என்ன?

திரைக்கதையை பொறுத்த வரை, தற்கொலை சீன், பேட்டி சீன் இரண்டும் இடையே திணிக்கப்பட்ட சீன்கள். அவற்றில் அவ்வளவு கற்பனை வறட்சி. எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்.

விஜயை தவிர்த்து ஒரு சிறு நடிகர் நடித்திருந்தால் இந்த படத்தின் நிலை என்ன? ஏன் விஜயகாந்த் என வைத்துக்கொள்வோம். என்னவாகியிருக்கும்? ஒரு சுமாரான கமர்சியல் படம், திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், நல்ல படமாய் இருந்திருக்கும் என்பதைத்தவிர கொண்டாட, கிண்டலடிக்க கூட படத்தில் ஏதும் இல்லை.

பிகி : செல்பி புள்ள பாடலுக்கு முந்தைய சீனுக்காவே இந்த படத்தை சுமார் படம் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

Monday, September 29, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்

பெங்களூரு வந்து கிட்டத்திட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. நேற்று இரண்டாம் ஆட்டம்  முடித்துவிட்டு வரும் போது நண்பன் ஒருவனிடம் சென்னை-பெங்களூரு ஓப்பீடு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஓடும் டாப்பிக். தமிழர்கள் அல்லாதவர்களிடம் மெட்ராஸ் குறித்த ஒரு பிம்பம் உண்டு. தமிழ் இல்லன்னா பிழைக்க முடியாத ஒரு ஊர் அது. சென்னை ஹீட்டுப்பா... எனக்கு பெரிதாக ஸ்டீரியோடைப்புகளில் நம்பிக்கை இல்லை என்பதால் சண்டை வராது. சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

நேத்து நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு எல்லாருக்குமே தமிழோ இந்தியோ தெரியுது. பிரச்சனை இல்லாத ஊர்ண்ணே. என் ஆபிசிலும் இதே தான் சொல்வார்கள். சென்னையில் ஹிந்தி பேசி பிழைக்க முடியாது. பெங்களூரில் கன்னடாக்காரர்களை பார்க்கவே முடிவதில்லை. எல்லாம் பெயர்ந்தவர்கள். இங்கே இருந்த மண்ணின் மைந்தர்கள், வீடு நிலம் மூலம் செட்டில் ஆனவர்கள் ஆனாலும் சரி, தங்கள் மொழி சார்ந்த அடையாளத்தை முற்றிலும் துடைத்தெறிந்து விட்டு வாழ்கிறார்கள். சினிமா, இலக்கியம் என எந்தக்கன்னடத்  தொடர்பும் அவர்கள் மொழி அடையாளத்தை உயிர்ப்புடன் வைக்கும் அளவு இல்லை. இந்த தலைமுறையினருக்காவது சற்று வருத்தம் இருக்கிறது. ஒரு இருபதாண்டுகள் கழித்தால், பெங்களூரில் பெங்களூரியன்ஸ் மட்டும் தான் இருப்பார்கள்.

மன்னிக்கவும். மெட்ராஸ் விமர்சனம் இடத்தான் ஆரம்பித்தேன். முன்னுரை கொஞ்சம் லெந்த்தா போச்சு.




சென்னை பல ஊர்களில் வந்து குவிந்த மக்களின் வாழ்வாதாரம். கட்டிடத்தில் பணிபுரியும் கூலிகள் தொடங்கி ஐடியில் ஐடி கார்டோடு திரியும் கூலிகள் வரை. ஆனால், மெட்ராஸ் அது வேறு. மெட்ராஸ், மெட்ராஸ்காரர்களின் ஊர். புளியந்தோப்பு - தலித்துகள் வாழும், அல்லது அவர்கள் வாழ பணிக்கப்பட்ட பகுதி. ஒரு சுவரை மையமாக வைத்து, அதிகாரத்திணிப்பை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தமிழ் பிரபாவின் விமர்சனத்தை கீழே பகிர்ந்துள்ளேன். வரிக்கு வரி நான் எழுத நினைத்ததையும், மேலும் சில வட சென்னை அத்தெண்டிக் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளதால், விடுபட்டவையை மட்டும் நான் சொல்கிறேன்.

தமிழ் பிரபாவின் விமர்சனம் : https://www.facebook.com/prabha.prabakaran/posts/807940465924748

 பொதுவாக எனக்கு கார்த்தியின் முகம் அலர்ஜி. தெலுங்கு பாணி நடிப்பு அவருடையது. இப்படத்திலும் க்ளைமேக்ஸில் ஸ்கூல் பாடம் உட்பட சில இடத்தில் சிரிப்பு வந்தாலும், ஓரளவு சமாளிக்கிற அளவு ஒன்றியிருக்கார். வட சென்னையின் முகத்தை மிக யதார்த்தமான ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார் ரஞ்சித். எல்லாருக்கும் இதில் புரிந்தது மேலோட்டமாய் தலித் அரசியல் - அதிகார அடக்குமுறை மட்டும் தான். எனக்குத்தெரிந்து ரஞ்சித் நுட்பமாய் சொன்னவை/ நான் ரசித்தவை :

1. அம்மக்களிடம் பொங்கும் காதலும், கனவுகளும் - அன்பும், அவன் மனைவியும் மோகம் கொள்ளும் இடங்கள் அனைத்துமே காதலின் உச்சம். எளிய மனிதர்களின் காதலை இதைவிடச்சிறப்பாக சொல்லிவிட முடியுமா எனத்தெரியவில்லை. பையனை புட் பால் பிளேயர் (கால்பந்து வீரன் :-) ) ஆக்குவது தொடங்கி எத்தனை கனவுகள்?

2. கலை. நடனக்குழு, புட்பால், கேரம் என விளையாட்டுகள். எல்லா ஏரியாவிலும் இக்குழுக்களில் திறமைமிக்க எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். இதைப்பெரும்பாலும் வெறும் சீன் பேக் ட்ராப்பாக மட்டுமே நம்மாட்கள் பயன்படுத்தி வந்தார்கள். ரஞ்சித் கதையோட்டத்தில் அதை இணைத்துள்ளார் - முக்கியமாய் நடனம், புட்பால், கானா.

3. அரசியல் எப்போதுமே ஆடு புலி ஆட்டம் தான். புலிகள் ஆடுகளை மோதவிட்டு வழியுமவற்றின் குருதியை நக்கிக்குடிக்கும் ஆட்டம். மேலிருக்கும் புலிகளுக்கு எல்லாருமே ஆடுகள் தான். தலித் அடையாள அரசியலைத் தாண்டி, மாரி - சேது கூட்டணி, மாரியை போட்டுத்தள்ளிவிட்டு விஜி மேலே வருவது, யார் வந்தாலும் சுவர் தன்னிடம் இருக்கவேண்டுமென நினைக்கும் சேது, அதற்கு மேல், கீழே உள்ள நிலைமை தெரிந்தும் கூட்டணி வைக்கும் தலைவர்கள் (எனக்கு விசி-பாமக ஒரு கூட்டணியில் இருந்ததை குத்தியதாக தெரிந்தது) என ஒரு படி கீழே இருப்பவன் ஆடாகத்தான் பாவிக்கப்படுகிறான்.

4. முதலிலேயே புள்ள குட்டிய படிக்க வைங்கடா என யதார்த்தமாக சொல்லும், ஜாலி இளைஞனாக, கொலை செய்து விட்டு பின் அவ்ளோ தானாடா என பினாத்தும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார் கார்த்தி.

5. ஜானி பற்றி ஊரே சிலாகித்து விட்டது. தொப்பி எட்த்துக்கிரேன் பாஸூ... ஹேட்ஸ் ஆஃப் ஜானி :)

                      மொத்தமாக வட சென்னையின் கனவுகள், காதல், அவ்விளைஞர்களின் திறமைகள், அவர்கள் வாழ்க்கைப்பாதையென அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, அதன் முன் நிற்கும் வரலாற்றின் நெடிய தொடர் சங்கிலி சவால்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதால் மெட்ராஸ் மிக முக்கியமான படம்.

                 இன்னொரு பக்கம். பரபரக்கிற ஸ்க்ரீன் ப்ளே. அரசியல் சதுரங்கத்தின் சோல்ஜர்-மந்திரி ஆட்டம், மிக யதார்த்தமான ஒரு காதல், அட்டகாசமான சந்தோஷ் நாரயணின் பிண்ணனி, பாடல்கள் என ஒரு பக்கா கமிர்ஷியல் ஹிட். இதற்காக சில ட்ரேட் ஆஃப்களை ரஞ்சித் செய்திருந்தாலும் அது ஓக்கே தான்.

படம் முடிந்தவுடன் என் நண்பனிடம் இதைத்தான் சொன்னேன்

"ஆரண்ய காண்டம் ஒரு கல்ட் க்ளாசிக்காகி விட்டது, மற்றபடி சென்னை இளைஞர் பாத்திரத்தை கதா நாயகனாக கொண்ட படங்களெல்லாம் கமர்சியல், மெட்ராஸ் இரண்டுக்கும் இடையிலான பேலண்ஸ்"

பாரட்டுக்கள் ரஞ்சித், சந்தோஷ் நாராயண், முரளி. லாங்க் வே டு கோ.


Tuesday, September 23, 2014

ஜில் கதை - 4

#ஜில்_கதைகள்

FB link - https://www.facebook.com/SHAN4Luv/posts/862637873749431?notif_t=like

ஜில் சோகமாக தன் காஃபி கப்பையே வெறித்தப்படி அமர்ந்திருந்தாள். சற்று நெருங்கி அமர்ந்து அவள் தோளில் கையைப்போட்டு இடப்புற கண்ணில் வழியலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்த நீரை தட்டி விட்டேன்.

தன் தோளை ஒரு முறை குலுக்கி என் கையை உதறியவள், "இந்தக் கண்ண தொடைக்கலாம்ல" என பொய்யாய் கோபப்பட்டாள்.

"என்னாச்சு ஜில்லு"

"ஒண்ணுமில்ல போ"

"என்னாச்சுன்னு கேக்கறேன்ல சொல்லு"

"பயமாயிருக்கு டா"

"ஏன்"

 மிக லேசாக தன் கருத்தை திருப்பினாள். வளர்பிறையில் நிலவு நாளுக்கு நாள் வளர்வதை பொறுமையோடு அமர்ந்து கவனித்திருக்கிறீர்களா? பதினைந்து நாள் நிகழ்வை இரண்டே நொடியில் நிகழ்த்திக்காட்டினால் ஜில். அவள் கருங்கூந்தல் இரவகன்று மெல்ல முக நிலவு உதயமானது. நிலவின் கண்களில் நீர்.

"ச்சு.... பாரு, கண்ல வெச்சுருக்கற உன் பிரண்டு கரையறா"

முறைத்தாள். அவள் தோழியின் நிறத்தை கிண்டல் செய்யும் போதெல்லாம், "இவர் அப்படியே வெண்ணிலா கலரு"ம்பா. இன்று அதீத மேக்கப்பிலிருந்தாள். அவளது மொச்சைக்கொட்டைகளை சுற்றி இடப்பட்டிருந்த ஐ லைனர் கரைந்து கன்னம் வரை கோடாய் வழிந்திருந்தது. இதிலும் அழகாய்த் தான் இருக்கிறாள். அழகான பெண்களுக்கு எது நிகழ்ந்தாலும், அதை அழகுணர்ச்சி மிக்கதாகவே பிம்பப்படுத்தி விடுகிறது மனது.

"இப்ப என்னாச்சு சொல்லப்போறியா இல்லையா?"

"இது சரிவருமா டா?"

 எனக்குப்புரிந்தது. எங்களைப்பற்றி கேட்கிறாள்.

"தெரியல ஜில்லு.... இப்போதைக்கு ஒரு இருபது லைக் வருது.... ஒரு ரெண்டு ஷேர்... நாலு டிஎம்... நீ உண்மை கேரக்டர்ன்னு வேற நம்புறாங்க... சரி வரும்ன்னு தான் நெனைக்கறேன்.."

"ஒத படுவ... நாயே... நெஜமாவே பயமாயிருக்கு டா...எங்க வீட்ட பத்தி உனக்கு தெரியாது"

"உஷ்ஷ்ஷ்..." அவள் உதட்டை என் முதல் மூன்று விரல்களால் அழுத்தி மூடினேன். நான்காம் விரலால் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்பினேன். என் முகம் இருந்த நெருக்கத்தை பார்ததும்  அவள் இதழ்கள் தங்களை அனிச்சையாய் ஈரப்படுத்திக்கொண்டன. எனக்கு சிரிப்பு வந்தது. லேசாய் கண்கள் சொருகி மூடினாள்.

"அடச்சீ...சீரியஸா ஒரு டயலாக் ரெடி பண்ணா சட்டுன்னு மூட ம்ம்மூடாக்கற"

"ஹா ஹா...ஷை... நீ இருக்கியே" என்றாள் கண்ணீர் சிதறி விழ சிரித்துக்கொண்டே. பெண்கள் அழுது முடித்துவுடன் குலுங்கிச்சிரிக்கும் காட்சி தான் தாய்மைக்கு அடுத்தபடியாய் மிக அழகானது. அடுத்த முறை உங்கள் காதலி அழுகையில் துடைத்து விடாமல் அவளை சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள் (முடியவில்லை எனில் ஜில்லுக்கு தெரியாமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்)

"சரி... இங்க பாரு... இது ஏன் ஆரம்பிச்சு...எதுவரைக்கும் போகும் எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா, நீ என்னைய விட்டு விலகணும்ன்னு நீயா நினைக்கற வரைக்கும், இங்க யாரும், யாரும், என்ன உன் கிட்ட இருந்து பிரிக்க மாட்டாங்க, நான் உட்பட"

"நெஜம்மா?"

 நான் ஒரு புன்னகையோடு அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் கண்களில் கலவரம் மறைந்து வெட்கம் உதிப்பது தெரிந்தது. பெண்களையும் குழந்தைகளியும் ஏன் ஒப்பிடுகிறார்கள் எனப் புரிந்தது போலிருந்து. ஏன் இப்படி ஒருத்தியிடம் காதலில் விழுந்தேன் என வியப்பாய் இருந்த அதே சமயம், அவளோடு அந்த நொடியில் மீண்டும் காதலில் விழத்தயாராய் இருந்தேன்.

யோசனையை மறைக்க இதழ்களில் புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நிமிர்ந்தேன். ஜில் அங்கு இல்லை. எதிரில் டேபிள் மின் விளக்கை பிரதிபலித்தபடி காலியாய் இருந்தது.