Flipkart

Amazon

Amazon

Sunday, December 22, 2013

ஐடி வேலையும் அரை கவளம் பர்கரும்!

                                                                                ஊருப்பக்கம் யாருனா ஆடு, மாடு வளத்துனா அதுங்களுக்கெல்லாம் ஆகாரம் வெச்ச பொறவு தான் வந்து சாப்பிட உட்காருவாங்க.  நாம சாப்பிடும் போது அதுங்களுக்கு பசிக்கக்கூடாதென்றது ஒரு காரணம், சாப்பிடும் போது கத்தி பாதில எழுப்பி விட்டுடுமேன்றது இன்னொரு காரணம். ஆனா, கம்யூட்டருக்கு இப்படி தண்ணி காட்டிட்டு நம்மளால நிம்மதி அரை கவளம் பர்கர கூட கடிக்க முடியாது, போனுல உலகத்துல ஏதோ ஒரு மூலைல இருந்து ஒருத்தன் நம்மள கடிப்பான்.

                 ஐடி வேலை பார்க்கும் எல்லோரும் சீட்டில் புட்டத்தை அழுந்த தேய்த்து அதற்கு மாதமாதம் வரும் விரல்களில் அடங்காத லகரங்களை எதிர்பாலினத்தரோடு குடித்து கூத்தடித்து தினம் ஒருவரோடு சல்லாபித்து வாழ்ந்து வருவதாக ஒரு பிம்பம் எல்லா மனதினுள்ளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. பொம்பள புள்ளைங்கள ஐடிக்கா அனுப்பறீங்க என்பது தொட்டு ஐடி நாய்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது வரை வசவு மொழிகளே கேட்டுக்கேட்டு வதங்கிப்போன வர்க்கம் இது.

              எல்லோரும் நினைப்பது போல இது ஒன்னும் பணம் காய்ச்சி மரம் இல்ல சாமிங்களா. காலைல அரக்க பரக்க எந்திரிச்சு ட்ராப்பிக்ல,சேத்துல, ஓடுற ஓ.எம்.ஆர் தண்ணில நீந்தி போய் என்ன கருமம்ன்னு எங்களுக்கே புரியாதத புரிஞ்சா மாதிரி நடிச்சு அத வெள்ளக்காரனுக்கும் புரிய வெச்சு(!!) சாயுங்காலம் ஏழு மணிக்கு கெளம்ப ஆரம்பிச்சா, அப்ப தான் புதுப் பொண்டாட்டிய மூடோட பாக்கற மாதிரி அவசர அவசரமா பக்கத்துல வந்து அவன் காலைல இருந்து செய்ய வேண்டிய வேலைய நம்ம தலைல கட்டுவான் ஒரு சொட்டத்தலையன் (ஒரு வேல அவன் வேணா நீங்க சொல்றா மாதிரி வாழுவான் போல யாரு கண்டா). இதை வாரம் ஐந்து முறை, சில வாரங்களில் ஏழு முறை கூட செஞ்சுட்டு வந்தா நம்ம பேர காட்டி 1 மணி நேரத்துக்கு இத்தினி டாலர்ன்னு கணக்கு போட்டு வாங்கீட்டு, அதுல 16 மணி நேரத்துக்கான காச நமக்கு ஒரு மாச சம்பளமா குடுப்பான்.

             ஒரு மெட்ரோ நகரத்தில் வீட்டு வாடகை தெரியுமா? பள்ளிக்கட்டணம்? பெட்ரோல் செலவு? ஒத்துக்கறோம் அய்யா, குடுக்கற காசை வாங்கீட்டு மூடிட்டு வர வர்க்கம் தான் நாங்க. அது ஒண்ணே ஒண்ணு தான் எங்க தப்பு.  அப்பறம் இன்னொன்னு ஐடிகாரனுங்க எல்லா விஷயத்துலையும் கருத்து சொல்றானுங்களாம். யோவ், தமிழ் நாட்ல இன்னிக்கு இதெல்லாம் சொல்லாதவன் எங்கய்யா இருக்கான்?

எல்லா பீட்லையும் முட்டாளும், Name dropping ஆளுங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. எல்லா நொட்டையும் சொல்லீட்டு எதுக்குய்யா உங்க பசங்கள ஐடி படிக்க வெக்கறீங்க? சமூகத்த திருத்தற நொன்னைங்க 20 வருஷமா வந்து நடக்கற ஐடி தற்கொலைகள தடுக்க வேண்டியது தான?

ஐடிகாரனுங்க கிட்ட தப்பே இல்லையான்னு கேக்காதீங்க. ஐடியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் மத்திய வர்க்கத்து மனோபாவ வார்ப்புகள். நமக்கேன் வம்பு டைப். இவர்களை பணந்தின்னிகளாக மாற்றிவிட்டது பணத்தாசை பிடித்த அவர்களது சுற்றம்/சமூகம். எதுக்கு சுத்தறோம்ன்னே தெரியாத செக்கு மாடு மாதிரின்னார் வா.மணிகண்டன். மிகச்சரியான உதாரணம். சமீபத்துல ஒரு கன்பெஷன் படிச்சேன். தற்கொலை பண்ணிக்க கூட ஆன்லைன்ல விஷம் ஆர்டர் பண்ணி இருக்கான். அடப்பாவிங்களா, கம்யூட்டருக்கு வெளிய ஒரு உலகம் இயங்கறதே மறந்துருச்சான்னு நெனச்சேன்.

இப்போ சொல்றேன் நோட் பண்ணிக்குங்க. என் முதல் நாவல், ஐடி துறை எப்படி ஒரு குடும்பத்துக்குள்ள ஒட்டகம் மாதிரி நுழையுதுன்னு பேசும். டாட்.

Thursday, December 5, 2013

நாவலிலிருந்து

                     அவள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தாள். மார்பு ஒவ்வொரு அடிக்கும் விம்மி விம்மி தாழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை கசகசத்தது. முன் கழுத்திலிருந்து கிளம்பிய வியர்வை மார்ப்பு குழியின் வழியோடி தொப்புளில் நின்று குறுகுறுப்பூட்டியது.

             காதுதருகில் கிசுகிசுப்பாய் ஒரு குரல் சில சமயம் கெஞ்சும் தொனியிலும், சில சம்யம் அதிகாரமாகவும், சில முறை  மன்னிப்பு கேட்கும் பாவனையும் நிற்கச்சொல்லிக்கொண்டே இருந்தது. அதை புறக்கணித்தபடி அவள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். அந்தக் குரல் மிகவும் நெருக்கமான குரல் என மனது அவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தது.

              எப்போதோ காதலித்த பழைய காதலர்களுள் ஒருவனாக இருக்கலாம். அவள் காதலர்களை நினைத்துக்கொண்டாள். எழுத்துக்கள் வட்டமிட்டு பல்வேறு பெயர்களை காட்டின. ஏனோ முரளியின் பெயர் ஆதிக்கம் செலுத்தியது போலிருந்தது.  அவனை நினைத்துக்கொண்டாள். அவனுக்கு இப்போது திருமணம் முடிந்திருக்கலாம். குழந்தை கூட இருக்கலாம். எதாவது ஒரு குழந்தைக்கோ அல்லது அது செல்லமாக வளர்க்கும் நாய்க்கோ தன் பெயர் வைத்திருப்பான். எப்போதாவது அவன் மனைவி இடது கழுத்தறுகே முத்தமிட்டு கடிக்கும் போது தன்னை நினைத்துக்கொள்வானாயிருக்கும்.

             காதோர கிசுகிசுப்பு இதற்குள் கூச்சலாய் மாறி மீண்டும் கிசுகிசுப்பாகி  இருந்தது. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என யோசித்து பார்த்தாள்.  அந்த குரலிற்கு நிற்கக்கூடாது என்பதற்காகவே ஓடுவதாகவே தோன்றியது. எப்போதிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம் என யோசிக்க முயன்றாள். ஏதோ கனவின் மத்தியில் இருப்பது போல இருந்தது. இந்த ஓட்டத்தின் தொடக்கமே அடுத்த நொடி நிகழவிருப்பதாய்
தோன்றியது. திரும்பி பார்க்கலாமா என யோசித்தாள். ஆனால், பயமானது ஆர்வம் பாசம் என அனைத்தையும் வென்றது.  மீண்டும் துவண்ட கால்களை கோணல் மாணலாக வைத்து ஓடலானாள்.

ஓடிக்கொண்டிருப்பது நின்று திரும்பிப்பார்க்க பயந்து தான் என அவளுக்கு தோன்றியது. வாழ்ந்து கொண்டிருப்பது மரணத்தின் மீதான பயத்தால் தான் என்று அவளுக்கு தோன்றியது. கோபப்படுவது இயலாமையின் சாரம் என்று தோன்றியது. எதிர்காலத்தையே பார்த்து ஓடுவது நினைவுகள் தரக்கூடிய வலியிலிருந்து தப்பிக்கவே என்று தோன்றியது. கனவிலியே இருக்க விரும்புவது விழிக்க விருப்பமினையால் என்று தோன்றியது.

விழிப்பு அவளை துரத்திக்கொண்டிருப்பதாக தோன்றியது.


------

அடுத்த ஜென்மத்தில் நான் சொல்லி "2324"ஆம் ஆண்டு ஈ-புத்தக , ஆடியோ புத்தக திருவிழாவிற்கு வெளிவர இருக்கும் எனது "மணல் மழை" நாவலில் இருந்து.