Flipkart

Amazon

Amazon

Saturday, March 24, 2012

கனவுகள் விற்பனைக்கு


Whoever had read my story “Love Agony and me” Here is the continuation in Tamil for now, The other lingual will be released a bit later.

டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே! ஆனால், இதே போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தாலோ அல்லது இந்த கேரக்டர்கள் ஆங்காங்கே உலாவிக்கொண்டு இருந்தாலோ நிர்வாகம் பொறுப்பல்ல :)



முதல் பாகம் படிக்காதவர்களுக்கு முன் கதை சுருக்கம் :

சித்துவும் சிந்துவும் கல்லூரி நண்பர்கள். சித்து சிந்துவை ஒரு தலையாக காதலித்தான். கல்லூரி முடிந்து பின் இருவரும் கல்லூரி கிராஜுவேஷன் டேவில் அடுத்த ஆண்டு சந்திக்கிறார்கள். சிந்து தனக்கு சித்து மீது இருக்கும் காதலை உணர்ந்து அந்த மேடையிலேயே முத்தமிடுகிறாள். இருவரும் ஒன்று சேருகிறார்கள்.

7 வருடங்களுக்கு பிறகு,

கார் கல்லூரிக்குள்  நுழையும் போது மணி 10:20. நான் ராமகிருஷ்ணன், கல்லூரிக்குள் ராம் அல்லது **** . நான் என் மனைவி இருவருமே இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். எல்லாருக்கும் கல்லூரி வாழ்க்கைல மறக்க முடியாத விஷயம் காதலா இருக்கும். நானும் என் வகுப்புத்தோழிய தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன். அவ பேரு ஆயிஷா. ஆனா காதலையும் தாண்டி என் கல்லூரி வாழ்க்கைல மறக்க முடியாத ஒருத்தன் இருக்கான், சித்து. எங்க கல்யாணத்துல  நடந்த எல்லா பிரச்சனையும் அவன் தான் தீர்த்தான். இன்னமும் எனக்கு ஆண் குழந்தை இல்ல. ஆனா பையன் பொறந்தா அவன் பேரத்தான் வெப்பேன்

இன்னில இருந்து சரியா 7 வருஷம் முன்னாடி, எங்கள் கிராஜுவேஷன் டே. படிச்சு முடிச்சு ஒரு வருஷம் கழிச்சு தான் டிகிரி தருவாங்க. அதுக்கான விழா. எனக்கும் இவளுக்கும் கடைசி ஆண்டு முடிந்த உடனே, பல திரில்லிங்குகளுக்கு இடையில திருமணம் முடிஞ்சுருச்சு. சித்துவுக்கு திரும்பவும் கல்லூரிக்கு வருவதற்கு சுத்தமா விருப்பம் இல்லை. காரணம் மறக்க நினைக்கும் பழய ரணங்களை இந்த பயணம்  கீறி விடும் என்பது தான். சித்து எவ்வளவோ மறுத்து பார்த்தான். ஆனாலும் வேற வழி இல்லாம தான் அங்க வந்தான். அந்த காயம் காதல், அதற்கு கா’ரணம்’ சிந்து. அவ கிட்ட இவன் எத பார்த்து விழுந்தான் ந்னு நாங்க எல்லாம் பட்டிமன்றமே வெச்சு இருக்கோம். அப்படி ஒண்ணும் தேவதை எல்லாம் இல்லை சிந்து. அவன் கிட்ட நான் சொன்னதா சொல்லாதீங்க. என்ன உரிச்சுருவான். நாங்க யாரவது செத்து கிடந்தா கூட கூலா என்ன ஆச்சு ந்னு கேக்குறவன் சித்து. “நகம் வெட்டுறப்போ காயம் டாஎன்று அவள் சொன்னதும், இவன் பதறியதை பார்த்து நாங்கள் கடுப்பானது உண்மை. எதனாலோ அவள் மீது பைத்தியமாக இருந்தான். சித்து பொண்ணுங்களையே பார்க்க மாட்டான் . சிந்து தான் அவன் முதன்முதலில் பார்த்த பெண் என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று தான் எனக்கும் ஆசை. ஆனா என்ன பண்றது, அவன் அப்படிபட்டவன் கிடையாது, சிந்துவை அவன் பார்க்கும் வரை. 



                                                                                                   "வாழ்க்கை வாழ்வதற்கே அடுத்தவங்கள கஷ்ட்டபடுத்தாத எந்த விஷயமும் தப்பில்லன்னு தத்துவம் சொல்லிகிட்டே சைட் அடிப்பான். ஆனா சிந்து வந்த பிறகு அவன் வாழ்க்கைல எல்லாமே மாறிடுச்சு. சிந்து வந்த பிறகு சைட் அடிக்கற விட்டுட்டான். யாரப் பார்த்தாலும் அவள மாதிரியே இருக்குன்னு சினிமா டயலாக் எல்லாம் பேசறான். சித்துவும் சிந்துவும் வெறும் நண்பர்கள் தான்ன்னு நானும் எல்லார் மாதிரியும் நினைச்சேன். ஆனா கல்லூரி கடைசி நாள் நான் படிச்ச சித்துவோட டைரி தான் எனக்கு உண்மைய புரிய வெச்சுது. இந்த நூற்றாண்டுலயும் டைரி எழுதற பழக்கம் உள்ளவன் அவன்.

சித்துவின் டைரி :
கல்லூரி மூன்றாம் வருடம் :
நவம்பர் 11, 2003 :
              நாளை எனக்கு நான்காவது செமஸ்ட்டர் தேர்வு, இன்று டைரி எழுதும் எண்ணமே இல்லை எனக்கு, இது வரை.
இன்னிக்கு ஒண்ணும் பெருசா நடக்கல. அவளுக்கு அந்த பாடம் வராது, இன்று முழுவதும் அவளுக்கு அதை சொல்லி குடுப்பதற்காகவே ஒதுக்கி இருந்தேன். எனக்கும் பெருசா அத பத்தி தெரியாதுன்னாலும் அவளுக்கு சொல்லி தரணும்ன்னே படிச்சேன். இது வரைக்கும் பல நாள் எனக்கு சொல்லி குடுத்து இருக்கா, நான் அவ சொன்னத கவனிச்சத விட அவ குரல ரசிச்ச நேரம் தான் ஜாஸ்தி. இது வரை நான் இவ்வளவு பேசியதே இல்லை ஒரே நாளில். அந்த நாள் அவளுக்கு தொண்டை வலிப்பதை கூட மறைத்து பேசினேன்.
நான் யாரையாவது காதலிக்கறேன்ன்னு தெரிஞ்சா நீ என்ன பண்ணுவ?” 
இந்த குறுஞ்செய்தி இரவு 11 மணிக்கு அவளிடம் இருந்து வந்த்து. அப்போது தான் என் மூளைக்கு உறைத்தது. நாங்கள் காதலர்கள் அல்ல. நாங்கள் காதலிக்கவில்லை. ஆனால் நட்பை தாண்டிய எதோ ஒரு இனம் புரியாத உணர்வு எங்களுக்குள் இருப்பதாகவும் இல்லை என்றும் எனக்கு நானே வாதப்பிரதிவாதங்கள் நடத்தியது உண்டு 
நீ அப்படி எல்லாம் பண்ன மாட்ட டா செல்லம்
என்ன தான் மெசேஜ்ஜ தட்டி விட்டுட்டேன்னாலும். மனசு முதல் வருடத்தில் அறிமுகம் இல்லாத போது ஒரு நண்பன் சொன்னதையே பிடித்து தொங்கிக்கொண்டு இருந்தது.
“Have I said you about Nithin?”
முதல் வருடத்தில் என் நண்பன் சொன்ன அதே பெயர். உள்ளுக்குள் எரிச்சல் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் மறுமொழி அனுப்பினேன்.
          இல்லயே
அப்பறம் அவளே பேசுனா அரை மணி நேரம் குறுங்கெய்திகளா வந்து குவியுது. இங்க என் மனசாட்சி வேற என்ன குத்தி கிழிக்குது. இது வரைக்கும் ஒரு மெசேஜ் எனக்குன்னு இப்படி அனுப்பி இருப்பாளா? கை வலிக்கும் அது இதுன்னு சாக்கு! ஆனா அந்தத் ….. (சென்சார்ட்) அவன பத்தி பேசும் போது மட்டும் எப்படி தான் இவ்வளவு தட்ட முடியுதோ.
மிக்ச்சரியா 12:05க்கு என் மொபைல உடைச்சேன்
!
           
சித்து தன்னோட வாழ்க்கைல யாருக்குமே சிந்து அளவுக்கு முக்கியத்துவம் குடுத்தது கிடையாது. அவன் பண்ணின தப்பே அது தான். அவளுக்கு அளவுக்கு அதிகமான, அவளுக்கு தகுதி இல்லாத முக்கியத்துவத்த குடுத்தது. அவள அவன் காதலிக்கறான்னே அவனுக்கு அன்னிக்கு தான் தெரிஞ்சுது.

         அதுக்கு முன்னாடியும் ரெண்டு பேரும்ஐ லவ் யூசொல்லிக்குவாங்கன்னாலும் அதுகிலோ அஞ்சு ரூபாங்கற மாதிரி ரொம்ப சாதாரணமாத்தான் தெரிஞ்சுதுஎனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்துவ மொதல்ல நேசிச்சது சிந்து தான். சிந்து , அத நட்பா பாத்தா. ஆனா, சித்து காதலா பாத்துட்டான். பசங்களோட வீக் பாயிண்ட்டே அதானே! இன்னும் நினைவு இருக்கு, சித்து என் கிட்ட ஒரு நாள்மச்சி, அவ வெளில போலாம். கோவிலுக்கு போலாம்கறா டா. அவ சரி இல்ல டா.. எங்க ப்ரபோஸ் பண்ணீருவாளோன்னு பயமா இருக்கு” என்றது. அப்போது அவன் காதலில் இல்லை. அவள் இன்னொருவனை விரும்புகிறாள் என்பதை தாங்க முடியாத போது தான் தான் காதலில் இருப்பதையே உணர்ந்திருக்கிறான் அவன்.  




     அவளுக்கு எப்போதுமே பயம் அதிகம். முடிவு எடுக்கத்தெரியாது. அவளுக்கு எல்லாமே கத்துக்கொடுத்தது சித்து தான். ஒரு விஷயம் செஞ்சுட்டு ஏன் செஞ்சோம்ன்னு யோசிச்சிட்டே இருப்பா, அது நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ. அவள முழுசா மாத்துனான் சித்து. அவளுக்கு தான் அழகு ரொம்ப கம்மின்னு ஒரு எண்ணம் அதை போக்குனதே சித்து தான். அவ ஒண்ணும் அவ்வளவு அழகு இல்ல தான். ஆனா சித்து என்ன சொல்லுவான் தெரியுமா?

அவ என் கண்ணுக்கு அழகு டா. Beauty and taste are relative theory. எனக்கு அவ அழகு. அவ்வளவு தான். அவளுக்கு மேக்-அப் போடவே தெரியாது மச்சி. அவ மேக்-அப் இல்லாம அவ்வளவு அழகா இருப்பா தெரியுமா? காலைல எந்திரிச்ச உடனே அவள பார்த்துட்டு ஒரு நாள் ‘அய்ய்யோ கொன்னுட்டா போ’. ஆனா அவ அழகு அவளுக்கே தெரியாது மச்சி… அவ இருக்காளே… “

இப்படித்தான் விட்டா அவள வர்ணிச்சுகிட்டே இருப்பான்.

     இந்த காதலிக்கறவங்களே இப்படித்தான் பாஸ். இதே நான் ஆயிஷா ஸ்லிம்மா இருக்கான்னு சொன்ன மட்டும் ஓட்டுவானுங்க. X-(

ஓவர் டூ கிராஜுவேஷன் டே

சித்துவின் டைரிகிராஜுவேஷன் டே : மார்ச் 11 , 2005
அவள் இத்தனை வருடம் தேக்கி வைத்திருந்த பாசத்தை எல்லாம் கோர்த்து முத்தமிட்டாள். என் கல்லூரி முதல்வருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. கல்லூரியின் முதல் மாணவியும், தட்டுத்தடுமாறி பாஸ் ஆன பையனும் நடு மேடையில் முத்தமிட்டுக்கொண்டால் பாவம் அவரால் என்ன தான் செய்ய முடியும்.
சித்து,” என்றாள்
ம்ம்ம்என்றேன் என் உதட்டை எடுக்காமலேயே.
நான் உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன்னு தெரியுமா?”
ஒரு கால் கூட பண்ணலசொல்லிவிட்டு ஒரு அடி விலகி நின்றேன்
பிரின்சி எங்கோ இருந்து ஓடி வந்தார்.
என்ன இது? ஸ்டேஜுல. சிந்து, டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ,”
டேய் மூடிட்டு போடாஇது நான்.
சட்டென சிரித்த சிந்து என் வாயை தன் கையால் மூடினாள்.

நீ திருந்தவே மாட்ட டா
 சத்தியமா சிந்துவ பாக்க கூடாது ந்னு நினைச்சு இஷட்டமே இல்லாம தான் இந்த இடத்துக்கு வந்தேன். ஆனா, வழக்கம் போல ரெண்டே நிமிஷத்துல என் கோவம் போன இடமே தெரியாம பண்ணீட்டா. சிந்து எனக்கு என்னிக்குமே ஸ்பெஷல். நாங்க முதன் முதலா கிளோஸ் ஆனது ஒரு கல்லூரி .வி தான். யாருமே இல்லாமல் ஒரு இடத்தில் அவள் தனியாக தவிக்க பின் அவளுடன் பழக ஆரம்பித்து, இருவருக்கும் பல ஒற்றுமைகள் தெரிந்து. நட்புக்குள்ளும் ஊடல் கூடல் எல்லாம் இருக்கு பாஸ்ன்னு நான் வெளியில் சொல்ல ஆரம்பித்ததும் அப்போது தான்.
     எனக்கு அவ உலகத்துலயே முக்கியமானவளா இருந்தா ஒரு வருஷம் முன்னாடி. ஆனா இப்போ அவள பாக்க கூடாதுன்னு ஆசைப்படறேன். நான் அவளுக்கு அத பண்ணேன் இத பண்ணேன்ன்னு சொல்லி எல்லாம் காமிக்க முடியாது. ஆனா அவ எனக்காக எதுவுமே பண்ணலன்ங்கறது வலிக்குது. அவ என்னோட சொத்து இல்லங்கறது வலிக்குது. நான் இன்னிக்கு அவள பாக்க கூடாது. இப்படி எல்லாம் நினைச்சு தான் வந்தேன். ஆனா , மறுபடியும் கவுத்துட்டா!”

    
          நாம் மழை வர வேண்டும் என நினைத்த போதெல்லாம் மழை வருகிறதா என்ன? காதலும் மழை போல தான். பார்க்க நனைய பரவசம் ஆனால் வேண்டும் போது வராது. சிந்துவுக்கு தன்னை மற்றவர்கள் எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை. அவன் பல முறை மிகவும் ஆசைப்பட்டு கேட்ட பல விஷயங்களை அவள் செய்யாததற்க்கு காரணம்ஊர் பார்த்தால் என்ன சொல்லும்?” என்பது தான். ஆனால்எவன் பார்த்தால் எனக்கு என்ன?” என்பான் சித்து.
இது தான் சித்து எழுதிய கடைசி டைரிப்பக்கம். இதை அவன் எழுதி முடித்தவுடன்,
சித்து,” கதவுக்கு பின்னால் இருந்து சிந்து அழைத்தால்

 அன்று எல்லாரும் ஒரு பொதுவான நண்பர் வீட்டில் தங்கி இருந்தோம்.
சித்து என்னை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தான். இந்த ஒரு வருடமாக சரக்கு அடித்து விட்டு, கதவுக்கு பின்னாடி சிந்து டா என்று அவன் புலம்புனது எல்லாம் இன்று உண்மை ஆகிவிட்டது.

ஒரு வருஷம் எவ்வளவு பேசுனான். இப்ப பாருங்க அவ பின்னாடி ஒரு நாய்க்குட்டி மாதிரி ஓடுறான். இந்த பசங்கள திருத்தவே முடியாது.

பின்னால் இருந்து ஆயிஷாஅங்க என்ன நின்னுகிட்டு யோசன?”.

ஒண்ணுமில்லம்மா J” (ம்ம்ம்ஹும் திருத்தவே முடியாது)

         அவர்கள் ஜோடியாய் நடப்பதை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு! சின்னக் குழந்தைகள் போல துள்ளித்துள்ளி ஓடுகிறார்கள். கை கோர்த்து அவர்கள் நடப்பதை எத்தனை முறை கற்பனை செய்து சொல்லியிருக்கிறான் சித்து. ஒரு முனையில் இருந்து இன்னொன்றுக்கு தாவி விளையாடினார்கள். என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

           பக்கத்தில் ஏதோ ஒரு கோவிலில் திருவிழா. பாட்டை அலற விட்டு இருந்தார்கள். சித்துவோடு நாங்கள் இங்கே ரூம் எடுத்து படித்த போது அவன் கோவில் நிர்வாகத்தோடு நிறைய முறை சண்டையிட்டு இருக்கிறான். அவன் ஒரு பகுத்தறிவுவாதியாம்! (என்ன கருமமோ , லவ்வு பண்ணுறப்ப மட்டும் அறிவ கழட்டி அட்டாலில வெச்சுருவான் போல)
அப்போது, என்னை தாண்டி அவர்களை நோக்கி தறி கெட்டு விரைந்தது விளக்கு இல்லாத அந்த லாரி. ஓட்டுனர் குடித்திருப்பான் என நினைக்கிறேன். அதன்  ஹாரன் சத்தம் இந்த பாட்டு சத்ததை தாண்டி அவர்கள் காதில் விழ நியாமில்லை.

         சித்துஊ….” வயிறு எக்கி கத்தினேன் பயனில்லை. அலைபேசியை தேடி அவனை அழைத்தேன். இன்னும் அவர்களுக்கும் லாரிக்கும் 10 அடி தான் இருந்தது.

எடுத்தான்.

         பின்னாடி பார்ர்றா….”  நான் சொல்லி அவன் திரும்பவதற்கும் லாரி அவர்களை சந்திப்பதற்க்கும் ஒரு நொடி டைவெளியே இருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை. இவ்வளவு நேரம் அணைத்து பிடித்து இருந்த சிந்துவை சட்டென மறுமுனைக்கு தள்ளிவிட்டான். பின் அவன் பாய முயல அதற்க்குள் லாரி அவன் மீது மோதி தூக்கி வீசியது.
சித்துவுக்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது. சிந்துவுக்கு ஒரு முறை கால் முறிந்த போது சித்து பட்ட வேதனை எல்லாருக்கும் தெரியும். பயபுள்ள ஒரு மாசம் தூங்க விடல என்னை.

         சில எலும்பு முறிவுகள் தான், உயிருக்கு ஒன்றும் இல்லை என் மருத்துவர் கூறி விட்டார். இது அபசகுனம் எனக்கூறி சிந்துவை அவள் அம்மா அழைத்து சென்று விட்டார். சிந்து வீட்டிற்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி. தங்கள் மகள் மேடையில் இவ்வாறு நடந்து கொள்வாள் என்று அவர்கள் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். ஏன் சித்துவே எதிர்பார்க்கவில்லை தான். அவர்களை சமாதானம் செய்வதாக வாக்குறுதி அளித்துச் சென்றாள் சிந்து.



போயிட்டாளா?” அவளை அனுப்பி விட்டு உள்ளே வந்ததும் சித்து என்னிடம் கேட்டான்.

டேய் முழிச்சிட்டா இருந்த? அப்பறம் ஏண்டா அவ வந்த தூங்கற மாதிரி நடிச்ச?” என்றேன்.

அவன் மெல்ல சிரித்தான். தலையை தூக்க முடியாத போது கூட சிரிக்கும் இவனை சிந்து அடிபட்ட போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும்!

போகட்டும் டா. அவ எனக்கு வேணாம்

எனக்கு தலை சுற்றுவது போல இருந்தது.

டேய் இவள நினைச்சு தான் டா ஒரு வருஷம் புலம்புன?” எனக்கு உண்மையாகவே கோவம் தலைக்கேறி விட்டது.

ஆமாம், ஆனா

என்ன ஆனா…”

இந்த டாக்ட்டர எனக்கு  நல்லா தெரியும். சிந்துவுக்கு அடிபட்டப்ப இருந்துஎன்றான்.

அதுக்கு?”

உங்ககிட்ட எனக்காக அவர் ஒரு பொய் சொல்லிட்டாரு, சித்து ஆயிசு இன்னும் நாலு மாசம் தான்சொல்லிவிட்டு கண்ணடித்து சிரித்தான். எனக்கு காலுக்கு கீழே நிலம் நழுவுவது போன்ற உணர்வு!      
            
காலேஜ்ன்னாலே சித்து சிந்து நியாபகம் தான் இல்ல”  என் நினைவை கலைத்தால் ஆயிஷா.
“சித்து ரொம்ப நல்லவன்,” நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே சொன்னேன். ஆயிஷாவிற்கு சித்துவை பிடிக்காது. சுத்தாமாக பொறுப்பில்லாத எதற்க்குமே உதவாதவன் என்பது அவள் வாதம்.
அது ஒரு வகையில் உண்மை தான். சித்துவிற்கு வாழ்க்கையில் எதுவுமே அமைந்தது இல்லை. அவன் செய்த்து எதுவுமே சரியாக முடிந்தது இல்லை. தனக்கு அதிஷ்ட்டம் என்று ஒன்று இல்லை என நன்றாக தெரிந்தும் அதைப்பற்றி அவன் பெரிதாக அலட்டிக்கொண்டது இல்லை.

ஹ்ம்ம்ம்என்னிடம்  இருந்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட்ட்து.
இன்னிக்கு என்ன நாள் நியாபகம் இருக்கா?”

ம்ம்சித்து நினைவு நாள்” அவள் சொல்லிவிட்டு வேறு பக்கம் வெறித்தாள் “இன்னியோட அஞ்சு வருஷம் முடியுது”

நான் காரில் இருந்து இறங்கினேன். எல்லா பழைய நண்பர்களும் ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். நட்பு வயதை மீறி இளமையானது. எவ்வளவு வயதானாலும், நாம் நண்பனை பார்த்த முதல் நாளுக்கு சென்று விடுவோம்.

எல்லாரும் ரொம்பவே மாறி இருந்தார்கள். “.டி பேட்ச் 2005” என்ற பேனர்கள் அங்கங்கே வைக்கப்பட்டு இருந்தன. எல்லார் முகத்திலும் பணக்காரத்தனம் தெரிந்தது. சாப்ட்வேர் வேலை காரணமாக உடல் பருத்து இருந்ததுஎன் கண்கள் சிந்துவை தேடியது. அது அதுசிந்து தான் ஒரு கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டு இருந்தாள். மெரூன் நிற புடவை, கூட ஒருவன் கண்ணாடி போட்டுக்கொண்டு நின்று கொண்டு இருந்தான். அவளுக்கும் அவனுக்கும் பொருத்தமே இல்லை. அவளை விட 10 மடங்கு பெரிதாக இருந்தான்.

சித்து இருந்திருந்தால்இவன பாத்தா புள்ள புடிக்கறவன் மாதிரி இருக்குஎன சொல்லி இருப்பான்.

     “ஹேய்,” என்றபடி அவளை சென்று கட்டிக்கொண்டாள் ஆயிஷா.
என்னை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். அவள் முகத்தில் ரத்தம் தொலைத்து இருந்தாள்.

அருகில் சென்றுஎப்படி இருக்க?” என்றேன்.

நல்லா இருக்கேன்என்றாள்.

திரும்பி வருவதாக சொல்லிவிட்டு சென்றவள் திரும்பவே இல்லை. குற்ற உணர்ச்சி அவளை அரித்திருக்க வேண்டும்.

இவர் என் ஹஸ்பண்ட், கல்யாண், டி.சி.எஸ் ல சீப் ப்ரோக்ராமர்
சித்து இருந்த வரைக்கும் பெரிதாய் அவனுக்கு வேலையில் நாட்டமில்லை. ஏனோ தானோ என்றே வேலைக்கு சென்று வந்தான். உண்மையை  சொல்லப்போனால் சிந்து இல்லை என்றான பிறகு அவனுக்கு எதிலுமே நாட்டமில்லை.

அறிமுகப்படுத்திய கையோடு யாரையோ அழைப்பது போல் பாவனை செய்து விட்டு கழன்டு கொண்டாள் சிந்து. அந்த குண்டு கல்யாணோடு பேசிக்கொண்டு இருந்தேன்.

ஒரு பையன் என்னிடம் ஓடி வந்து “அங்கிள் சாக்லேட் எடுத்துக்குங்க” என்றான்.

சே இத்தனை வயசானாலும் யாரவது அங்கிள் என்று கூப்பிட்டால் வலிக்கிறது. ஏன் அண்ணன்ன்னு சொன்னா கொறஞ்சா போயிடுவான்?

“எதுக்கு தம்பி?” என்றேன்.

“எனக்கு இன்னிக்கு பர்த்-டே அங்கிள்,” என்றான்

“உன் பேர் என்னப்பா?,”

அதற்குள் யாரோ கூப்பிட அந்த சிறுவன் ஓடி விட்டான்.

“சித்தார்த்,” கல்யாண் சொன்னான் “ எங்க அப்பா பேரு, இத வெக்க கூடாதுன்னு சிந்து ஒரே ரகள, அவள சமாதனப்படுத்தறத்துக்குள்ள…”
அவன் பேசிக்கொண்டே போனான் எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. சித்து தன் மரணத்தின் போது சொன்னது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்த்து.

“எனக்கு சிந்து அழுகற மாதிரி, கதர்ற மாதிரி தோணுது டா,”

“பையனுக்கு எவ்வளவு வயசு?”

“அஞ்சு”

நான் சிரித்தேன். அந்த பையனை என் கண்கள் தானாக தேடியது. சிந்துவுடன் ஏதோ விளையாடிக்கொண்டு இருந்தான்.

“சித்துவுக்கு சிந்துன்னா உசுரு, அவ இல்லாம ஒரு நாள் 
கூட தனியா தூங்க மாட்டான், சாப்பிட மாட்டான். அவ்வளவு பாசம் அவ மேல”

நான் சிரித்தேன். ஆனாலும் ஏனோ கண்ணீர் துளிர் விட்டு என் முகரோமங்களினூடே குறுகுறுத்தது.

“எனக்கு தெரியும்,” என்று சொல்லிவிட்டு சிந்துவையும் சித்துவையும் பார்த்தபடியே சொன்னேன் “சித்துவுக்கு சிந்துன்னா உசுரு”.

    

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..