Flipkart

Amazon

Amazon

Sunday, January 20, 2013

ஒரு முத்தமும் சில பதில்களும் : ஞானியின் ஓ பக்கங்கள் கட்டுரைக்கான எதிர்வினை


:
             சில நாட்களுக்கு முன்பு ஞானி தனது முகநூல்பக்கத்தில் கருத்தொன்றை பதிந்திருந்தார். அதற்கு கீழே இந்த கமெண்ட்டை இட்டு இருந்தேன். புத்தக கண்காட்சி அது இதுவென பிசியாக இருப்பதால், அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை போல. இருக்கட்டும். இதன் தொடர்ச்சியாக பதிவர்கள் டைனோ பாய் (Dyno Buoy – கூகுள் ப்ளஸ்ஸில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது) ஞானி பக்கத்தில் ஒரு போஸ்ட் இட்டிருந்தார். ஞானியும் “ஓ பக்கங்களில்” முத்தமும் கேள்வியும் என எழுதி இருந்தார். அப்பத்திக்கான எதிர்வினையே இக்கட்டுரை.

       ஜெமோவை முன்னிறுத்தி ராதாவை பார்த்தும், மணிரத்னத்தை பார்த்தும் நான் கேட்கிறேன் “இது ‘அறமா’குமா” என பொங்கி இருந்தார் ஞானி. முதலில் பதினைந்து வயது பெண் எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிக்கலாம் என்ற கேள்வியை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு பார்த்தால், தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகிகளை அறிமுகப்படுத்துவது வெறும் உடற்கூறை முன்னிறுத்தித்தான் என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

          அடுத்து துளசி முத்த விவகாரம். கதைக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில், ஒரு படைப்பாளியின் கோணத்தில் பதினைந்து வயதியில் அச்சிறுமியை அப்படி முத்தமிட்டு நடிக்க வைத்ததில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் உடன்பாடு இருக்கும் பட்சத்தில் யாதொரும் தவறும் இல்லை. உலகப்படங்கள் பலவற்றில் இது நடந்து கொண்டு தான் உள்ளது. ஆனால், மனசாட்சி இல்லாமல், உலகப்படங்களை தமிழ் சினிமாவோடு ஒப்பிடும் சாருவின் அறம் என்னிடம் இல்லை. ஆனால், தமிழ் சினிமாவில் கதை இருக்கும் படங்களே வரவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. கதையோடு அல்லது திரைக்கதையோடு படம் எடுக்கும் வெகு சிலரின் மணிரத்னமும் ஒருவர். எனவே, படத்தை பார்க்காமல், கதை என்னவென்றே தெரியாமல், இதை எதிர்க்க யாருக்கும் உரிமை இல்லை. பதினைந்து வயதில் காதல் வருவது (அது காதலோ, Infatuationனோ) வருவது இயல்பு. அதை காட்சிப்படுத்துவது ஒரு கலைஞனின் உரிமை. ஒரு படைப்பாளியின் கையை ஏற்கனவே நமது சென்சார் கட்டிப்போடும் நிலையில் இன்னமும் இவ்வாறெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்தால், நல்ல படங்களே எடுக்க முடியாது.

        இதை விட முக்கியமாக எதிர்க்கப்பட வேண்டியது "Axe" விளம்பரம் போன்ற எண்ண்ற்ற விளம்பரங்களே, அவ்விளரம்பரங்களில் உள்ள ஆடையோ ஆபாசமோ அல்ல அவற்றை நான் எதிர்க்க காரணம். மாறாக, அவை பெண்ணை வெறும் நறுமணத்திற்கோ வேறு எதற்கோ மயங்கும் பொருளாக சித்தரிப்பதும் தான். மிக முக்கியமாக, நம் விடலைகளுக்கு சினிமாவையும் வாழ்க்கையையும் வேறுபடுத்தி பார்க்க கற்றுக்கொடுக்க வேண்டும். கணினி திரை இல்லாத காலகட்டங்களில் கூட மஞ்சள் புத்தகங்கள் மூலம் ரகசியமாய் அறிந்து கொண்ட பார்னோ, இன்று கணினிக்குள்ளும், கைப்பேசிக்குள்ளும் சுருங்கி விட்டது. ஒரு ஆய்வின் படி, சினிமாக்களை தியேட்டரில் சென்று பார்க்கும் வசதியுடைய எல்லார் வீட்டு சிறுவர்களும் (90 சதவீதம்) ஏதோ ஒரு வகையில் ஸ்மார்ட் போனோ கணினியோ பயன்படுத்துகிறார்கள். எனவே, இவர்கள் வெகுஜன படத்தில் உள்ள பாடல்களை, ஆபாசத்தை பார்த்து தான் கெட்டுப்போகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். அதை அவர்கள் எதோ ஒரு வெப்சைட்டில் பார்த்துக்கொண்டு விடுவார்கள்.  நான் சொல்வதைக்கூட விடுங்கள், ஒரு பதினைந்து வயது சிறுவனிடம் போய் பேசிப்பாருங்கள்.

ஆனால், அந்த சித்தரிப்பு முக்கியமானது. உதாரணமாக, அந்த முத்தம் கொடுக்க அந்த பெண்ணின் ஒப்புதல் தேவையில்லை என காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அது அவர்கள் மனதில் பதிந்து விடுகிறது. இதே போலத்தான், சிகரெட்டை ஹீரோ பிடிப்பதும், தண்ணீ அடிப்பதம் ஹீரோயிஸ செயலாக மனதில் நிலைத்து விடுகிறது. 

         மீண்டும் சொல்கிறேன். என் கருத்தை திரித்து புரிந்து கொள்ளாதீர்கள். பெண்களை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பது மிக முக்கியம். எதிர்க்க வேண்டும் எனில் “இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள” என்றாரே எம்.ஜி.ஆர் அதையல்லவா முதலில் எதிர்க்க வேண்டும்? ஆபாச சினிமா என்பது சதை இருக்கும் எல்லா சினிமாக்களும் அல்ல. ஒரு பாலியல் வக்கிரத்தை சித்தரிக்கும் படைப்பாளியோ அல்லது ஒரு பதின் வயது காதலை காட்சிப்படுத்தும் படைப்பாளியோ அதை வேறு எப்படித்தான் காட்சிப்படுத்த முடியும்?

 டெல்லி பாலியல் வன்முறையைக்கூட வைத்து சம்பாதிக்க சினிமா எடுக்கிறார்கள், எத்தனையோ பி க்ரேட் படங்களில் சிறு வயது பெண்கள் நடிக்கிறார்கள். அதை எல்லாம் விட்டு விட்டு "கடல்" படத்தில் எதற்கான காட்சி அது என்று கூட தெரியாமலிருக்கும் போது ஞானி பொங்குவது ஏன் என்று புரியவில்லை.. (கதைக்கு தேவையோ இல்லையோ, அப்படி நடிக்கக்கூடாது என்பாறேயானால் அக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை).

           இதன் ஒரு கமெண்ட்டில் “அலைபாயுதே” கூட ஆபாச படம், தவறான எண்ணத்தை விதைக்கிறது என்று ஒருவர் கமெண்ட்டி இருந்தார். அதை 120 ஷேர் செய்தவர்களின் மன நிலை என்னவென்பதை யூகிக்க முடிந்தது!

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..