Flipkart

Amazon

Amazon

Sunday, March 3, 2013

மற்றுமொரு பக்கம் - தொடர் பத்தி - 1

                இரண்டு நாள் இருக்கும். காலை பேருந்துக்காக காத்திருந்த போது கோகுல் தம்பி கூப்பிட்டான்.

"அண்ணே, நல்லா எழுதி இருக்கேண்ணே... தமிழ் "ஈசி" தான்" என்றான்.

          கொஞ்சம் இருமி, அந்த நேரத்தில் யோசித்து "அட, பொதுத்தேர்வு தொடங்கி விட்டதே" என பின் மண்டையில் பல்பு எரிந்து பின் வழக்கமான தேர்வு அறிவுரைகள் சொல்லிவிட்டு வைத்தேன். இந்த வருடம் பொதுத்தேர்வை வழக்கம் போல லட்சக்கணக்கில் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

            குப்பை கூளங்களை போல, வரைமுறை இல்லாமல் பொறியியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கிறோம். முன்பொரு காலத்தில் நிலக்கிழார், பெரு முதலாளி வர்க்கம், இன்று கல்லூரிகளை திறந்து வைத்து, கடை விரித்திருக்கிறது. ரேவதி அக்கா ஊரெல்லாம் அநியாய வட்டிக்கு கடன் வாங்கிய காசையையும், முருகேசன் சித்தப்பா விவசாய நிலம் விற்ற காசையும் தங்கப்பல் தெரிய சிரித்து வாங்கி வயிறு வளர்க்கிறார்கள். டொனேஷன் போக, ஏகப்பட்ட கட்டணங்கள்.

            நாலு வருட என் பொறியியல் வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த ஒரே பாடம்  "நீ இதுக்கு சரி பட்டு வர மாட்ட" என்பது தான். கல்வி தந்தைகள் எல்லாரும் களவாணிகள் என்று நான் சொல்லவில்லை, அப்படி இல்லாதிருந்திருந்தால் நன்றாயிருக்குமே என அங்கலாய்க்கிறேன். சமூகம் பற்றிய அறிவை சற்றும் கற்றுத்தராமல், கார்பரெட்டுகளுக்கான அடிமைகளை வளர்த்தெடுக்கும் கல்விமுறை தான் இன்றைய இஞ்சினியரிங். வளர்ந்த வளரும் கல்லூரிகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பல நேரங்களில், இது சிறையா என சந்தேகிக்க வைக்கும். வளரதா கல்லூரிகளில் பேனரில் மட்டும் கட்டடங்களை காட்டி பணம் கறந்து , வெற்று மேசைகளை தேய்க்க வைக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து தோட்டா ஜெகன் அண்ணன் முதல் நண்பர் சுனில் வரை ஐடி வேலையை உதறி விட்டு வந்தவர்கள் எத்தனையோ பேர். வாழ்க்கையை கற்றுக்கொடுக்காமல் வெறும் வேலைவாய்ப்புக்கான கல்வியை தான் நாம் கொண்டாடி வருகிறோம்.


              இன்றைய குழந்தை வளர்ப்பு பெரும்பாலும் "கார்ப்பரேட் " மயமாகிவிட்டது. பிள்ளைகளை முதலீடாக பார்க்க பழகி விட்டோம். மூன்றாம் வீட்டு கீதா குழந்தை கற்றுக்கொள்வதாலேயே பாட்டும், பக்கத்து சீட்டு சுப்பிரமணியம் பையன் விளையாடுவதாலேயே டென்னிஸ் கோச்சிங்கும் நம் பிள்ளைகளுக்கும் அவசிமாகிப்போகிறது.

        சூப்பர் சிங்கரில் தலைகாட்டாத, இன்ஜினியரிங், மெடிக்கல் படிப்பதை தன் கனவென கொள்ளாத, வந்த மாமாவுக்கு ரைம்ஸ் பாடி காட்டாத, அம்மாவை மம்மி என்று அழைக்காத குழந்தைகள் சாபங்களாக பார்க்கப்படுகின்றன. கில்லியும், கபடியும் இருப்பது கூட தெரியாமல், அம்புலி மாமாவையும் டைகரையும் காட்டாமலேயே ஒரு தலைமுறை வளர்ந்து விடுதல் என் வரையில் கொடுமை.

          நான்கைந்து வருடங்கள் இருக்கும். ஒரு மே மாதத்தில், மோகன் அவசர அவசரமாக அதிகாலை ஒன்பதரை வாக்கில் காதினுள் இரைந்து எழுப்பினான். அவனோடு படித்த முகம் தெரியாத ஒருவனின் மரணச்செய்தி. பைக் கேட்டவனோடு கூடவே சென்றேன். ப்ளஸ் டூவில் தோல்வி, மரணத்திற்கு அவனை இட்டுச்சென்றுள்ளது. உண்மையில் அதுவா அவனி அது நோக்கி நெட்டித்தள்ளியது??

       அந்த சாவு வீட்டில் கூடியிருந்த கூட்டம், அவன் ஒரு வேளை சாகாமல் இருந்திருந்தால் அவனை பேசிப்பேசியே கொன்றிருக்காதா? என் சார் பையன் என அவன் அப்பாவை தூண்டி விட்டு கொன்றிருக்காதா? இந்த தேர்வுகளும் இஞ்சினியரிங்கும் தான் வாழ்க்கை என ஒரு தலைமுறையையே ஏமாற்றி அவர்கள் குழந்தை பருவத்தை, பதின்பருவத்தை கொன்றிருக்கிறோம்.

        விடியலுக்கு முந்தைய நேரம், ஒரு ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிருந்து இறங்கி, ஒரு பதினொரு வயது மதிக்கத்தக்க சிறுவனிடம் கேட்டேன்.

"தம்பி நீ ஸ்கூலுக்கு போவலியா?"

" போன வருஷம் வரைக்கும் போனேன். எழுத படிக்க தெரியும், அம்மாவுக்கு மேலுக்கு முடியல, அப்பா இல்ல.. அதான்" என்றான்.

"ஸ்கூலுக்கு போயிட்டு வந்து புத்தகம் விக்கலாமே", ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டே கேட்டேன்.

"அம்மாக்கு எதுனா ஆச்சுன்னா கூட இருந்து பாத்துக்குறியா?"

 படித்தவர்களுக்கே உரிய கள்ளப்பார்வை பார்த்து, மௌனமாய் நின்றேன்.

"படிக்கறேன் சார் இப்பவும்.  நல்லா எழுத படிக்க தெரியும். பின்னால பொறுமையா பத்தாப்பு எழுதிக்கலாம். இன்னமும் ஒரு பத்து வருசங்களிச்சு வாங்க, எங்கம்மா பேர்ல ஒரு புக்கு கட, இங்கயே வெச்சுகாட்றேன்"

   இன்ஜினியரிங்கை விட பெரிய படிப்புகள், அதிகாலை ரயில் நிலையங்களில் கிடைக்கின்றன.








       
 

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..